தமிழகம் புதுவையில் 24 மணி நேரத்திற்கு கனமழை: குற்றால அருவிகளில் 2வது நாளாக வெள்ளம்
நெல்லை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்காசி,குற்றாலம் பகுதிகளில் விடிய,விடிய பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர்.
சேலம், நாமக்கல் மாவட்டத்திலும் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டது ஏற்காடு இருளில் முழ்கியது.
குற்றாலம் பகுதியில் கடந்த இருதினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பேரருவி,ஐந்தருவி,பழையகுற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் சுற்றுலாப்பயணிகளின் நலன்கருதி குளிப்பதற்கு போலீஸார் தடைவிதித்தனர்.
காட்டாற்று வெள்ளம்
செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரையிலும் இடைவிடாமல் பெய்த தொடர்மழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் நள்ளிரவில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்தது.
தடுப்பு கம்பிகள் சேதம்
மலைப்பகுதியிலிருந்து மரம் ஒன்று அடித்துவரப்பட்டது.அருவிப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பேரருவியில் பெண்கள் குளிக்க செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகம்பிகள் சேதமடைந்தது.முதலாவது நடைபாலத்திலிருந்த டைல்ஸ்கள்,கைப்பிடிகம்பிகள் அனைத்தும் சேதமடைந்தன.
சேறும் சகதியுமாய் நடைபாதை
இரண்டாவது நடைபாலம் முழுவதும் மணல்,கற்கள்,சகதிகளால் நிறைந்து நடந்து செல்லமுடியாதவாறு மூழ்கடிக்கப்பட்டது.இதனையடுத்து சிறப்புநிலை பேரூராட்சி பணியாளர்கள் இரண்டாவது நடைபாலத்தை சுத்தப்படுத்தும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
சாய்ந்த மரங்கள்
குற்றாலம் ஐந்தருவியில் ஐந்துகிளைகளிலும் தண்ணீரின் சீற்றம் குறையவில்லை. குற்றாலத்திலிருந்து பழையகுற்றாலம் வழியாக மத்தளம்பாறை செல்லும் சாலையில் மூன்று மரங்கள் சாய்ந்து விழுந்தது.இதனால் அந்தசாலையில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.உடனடியாக மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது.பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவி நீர் நிரம்பி, வழிந்தோடும் நடைபாதையில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
வெள்ளப்பெருக்கு
தென்காசி சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து பாலத்தின் கீழ்பகுதியில் அமலைசெடிகள் சேர்ந்து தண்ணீர்செல்வதில் தடைஏற்பட்டது. இதனயைடுத்து அமலைசெடிகள் அகற்றும்பணி நடைபெற்றது.
இடிதாக்கி வீடு இடிந்தது
மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு காவனூர் கிராமத்தில் பலத்த மழை கொட்டியது. திடீரென வீட்டின் மீது இடி தாக்கியது. இதில் சுவர்கள் இடிந்து விழுந்தன. வீட்டிற்குள் இருந்த அண்ணாமலை, மல்லிகா, மழைக்காக ஒதுங்கிய சகாதேவன் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். மயக்க நிலையில் இருந்த அவர்கள் 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
சேலத்தில் மழை
சேலத்தில் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக வெப்பம் அதிகளவில் நிலவியது. அதிக பட்சமாக வெயில் 106 டிகிரியை தாண்டியது.
இதனால் பொதுமக்கள் அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயில் அதிகளவில் இருக்கும் என்று அச்சப்பட்டனர். ஆனால்அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்ரி வெயில் தொடங்கியதில் இருந்தே சேலத்தில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசிவருகிறது.
கொட்டித்தீர்த்த மழை
செவ்வாய்கிழமை காலை முதலே சேலம் மாவட்டம் முழுவதும் மேக கூட்டங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் மதியம் 2 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை வருவது போல் இருந்தது. மேலும் பலத்த சூறாவளி காற்றும் வீசியது. பின்னர் மழை கொட்ட ஆரம்பித்தது. தொடர்ந்து சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை கொட்டோ, கொட்டென கொட்டியது. இதே போல் மாவட்டத்தின் அனேக இடங்களிலும் மழை பரவலாக பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியபடி இருந்தது.
இருளில் மூழ்கிய நகரம்
நேற்று மாலை 6.30 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து விடிய, விடிய கொட்டி கொண்டே இருந்தது. பயங்கர இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து இன்று காலை 8 மணி வரை மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் இரவில் மின் தடை ஏற்பட்டது. தொடர் மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது. வெப்பம் முற்றிலுமாக தணிந்தது.
சாலைகளில் வெள்ளம்
தொடர்ந்து இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக நகரின் பல இடங்களில் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மெதுவாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து சென்றனர். இதே போல் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், தம்மம்பட்டி, புத்திர கவுண்ம்பாளையம், கருமந்துறை, வாழப்பாடி, எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டியது. சேலம் தாலுகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
ஏற்காட்டில் சூறாவளி
மலை பகுதியான ஏற்காட்டிலும் நேற்று மதியம் 2 மணியளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய பெய்த மழை இன்று காலை 8 மணிக்குத்தான் நின்றது. ஆனாலும் மழை வருவது போல் மேககூட்டங்கள் திரண்டு இருக்கிறது. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் நேற்று இரவு 7 மணி முதல் ஏற்காடு பகுதியில் மின் தடை ஏற்பட்டது. நள்ளிரவு சுமார் 30 நிமிடங்கள் வரை மட்டுமே இருந்த மின்சாரம் மீண்டும் தடைப்பட்டது. இன்று காலை வரை மின்சாரம் வரவில்லை. இதனால் ஏற்காடு நகரமே இருளில் மூழ்கியது.
நாமக்கல் மாவட்டத்தில் மழை
நாமக்கல் மாவட்டத்திலும் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளிலும் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை கொட்டியது.
இன்று காலையும் நாமக்கல்லில் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் ஜில்லென காற்று வீசிவருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பல இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது.
மா விவசாயிகள் மகிழ்ச்சி
இன்று காலை ஒகேனக்கல் பகுதியில் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் மா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பல இடங்களில் மழை வருவது போல் மேக கூட்டங்கள் திரண்டு இருந்தது. ஆனால் மழை இல்லை. தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக வெப்பம் முற்றிலுமாக தணிந்து குளிர்ந்த காற்று வீசிவருகிறது.
24 மணிநேரத்திற்கு கனமழை
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் ரமணன் கூறியதாவது;
கேரளா, கர்நாடகாவை நோக்கி
'வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து வடகிழக்காக நகர்ந்து கேரளா, கர்நாடகாவை நோக்கி செல்கிறது. அதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மற்றும் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய கூடும்.
சென்னையில் மேகமூட்டம்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழையோ, அல்லது இடி மின்னலுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ரமணன் தெரிவித்துள்ளார்.