100% ஊதிய உயர்வு கேட்கவில்லை 2.57% கேட்டுத் தான் போராடுகிறோம் : போக்குவரத்து ஊழியர்கள்
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்து இருப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னை : போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் நியாயமான 2.57% உயர்வை வழங்க வேண்டும் என்று தான் போராடுகிறோம். அதை வழங்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து, உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிட்டு உள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஊழியர்களுக்கு சரி வர சம்பளம் கொடுப்பது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பண்டிகை கால போனஸ் ஆகியவற்றை சரி வர வழங்க முடியாமல் திணறி வந்தது. இதனால் நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும், 2.57 % ஊதிய உயர்வு கேட்டும் போராட்டத்தில் இறங்கினர். இவர்களோடு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்காததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து நேற்று மாலை முதலே போக்குவரத்து ஊழியர்கள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 95% அதிகமான பணியாளர்கள் வேலைநிறுத்ததில் பங்கு பெற்றதால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பணிக்குத் திரும்ப அரசு விடுத்த அழைப்பையும் ஊழியர்கள் நிராகரித்து விட்டனர்.
பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசு ஊழியர்கள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது, வேலைக்கு திரும்பாவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் இருப்பவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்து உள்ளனர்.மேலும், சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லலாம். ஏற்கனவே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டத்திலும் இதே விஷயத்தை தான் வலியுறுத்தி உள்ளோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வெறும் 2.57% ஊதிய உயர்வு
பணிக்கு திரும்பாமல் இருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இது போக்குவரத்து ஊழியர்களை கடும் அதிருப்தியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. 2.57% ஊதிய உயர்வு தான் கேட்டு போராடுகிறோம்; அதுவும் இத்தனை ஆண்டுகள் சமாளித்து பார்த்து முடியாத நிலையில் தான் போராட்டத்தில் இறங்கி உள்ளோம். இந்நிலையில் இந்த உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்து உள்ளது. எம்எல்ஏக்களின் சம்பளம் ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது ஆனால் நாங்கள் கேட்பது வெறும் 2.57% உயர்வு தான் அதை வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊழியர்களை நிலை
நீதிபதிகளுக்காக சம்பள உயர்வு மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேறி இருக்கிறது. அதன்படி உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் 100% அதிகரித்து உள்ளது. இதன்படி உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் 2.25 லட்சமாக அதிகரித்து உள்ளது. ஆனால், நாங்கள் கேட்பது வெறும் 2.57% உயர்வு தான் அதை வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.