பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது இருக்காது... கொட்டும் மழையில் சூளுரைத்த அன்புமணி
வேலூர்: 50 ஆண்டு காலம் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு கொடுத்த ஆட்சியை, பா.ம.க.விற்கு வெறும் 5 ஆண்டுகாலம் கொடுங்கள். நல்ல திட்டங்களை கொடுப்போம். ஊழலற்ற கண்ணியமான ஆட்சியை அமைப்போம். காமராஜர் ஆட்சியை கொடுப்போம் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
வேலூரில் நடைபெற்ற வடக்கு மண்டல மாநாட்டில் கொட்டும் மழையில் பேசிய அன்புமணி இவ்வாறு சூளுரைத்தார்.
வடக்கு மண்டல மாநாடு
பாட்டாளி மக்கள் கட்சியின் "கண்ணியமான அரசியல், நேர்மையான தேர்தல், மது, ஊழல் இல்லாத ஆட்சி, மக்களின் வாழ்வுரிமைக்கு 2016ல் ஆட்சி மாற்றம், முன்னேற்றத்துக்கான" வடக்கு மண்டல மாநாடு வேலூரை அடுத்த பள்ளிகொண்டா பகுதியில் சுங்கச்சாவடி அருகில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் பங்கேற்றனர்.
கொட்டிய மழையில்
இதில் மாநில தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம் உள்பட பலர் பேசினர். அவர்களைத் தொடர்ந்து மைக் பிடித்த அன்புமணி, கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களைப் பார்த்த உடன் உற்சாகமடைந்தார். லேசாக தூறிக்கொண்டிருந்த வானம், பொத்துக்கொண்டு ஊற்ற ஆரம்பித்தது. ஆனாலும் தொண்டர்கள் அசராமல் அன்புமணி பேசுவதை கேட்க காத்திருந்தனர்.
தைரியமான தம்பிகள்
அதே உற்சாகத்தோடு பேச ஆரம்பித்தார் அன்புமணி, இடி, இடித்தாலும், புயல் அடித்தாலும் என்னுடைய தம்பிகள் தைரியமாக அதை எதிர்கொள்வார்கள். எங்களுக்கு மாற்றம் நிச்சயமாக வேண்டும் என்று வருகை தந்திருக்கிற அனைவருக்கும் வணக்கம். மாற்றம், முன்னேற்றம், வந்துவிட்டது. இது நமக்கான நேரம். இது சாதாரண கூட்டம் கிடையாது. இவ்வளவு கொட்டும் மழையிலும் தைரியமாக நின்று கொண்டு மாற்றத்தை கொண்டு வரும் கூட்டம் இது.
வீரம் நிறைந்த மண்
வேலூர் மண் சாதாரண மண் கிடையாது. சுதந்திர போராட்டம் 1857ம் ஆண்டில் தொடங்கியது. 1806 ஆண்டில் இந்த மண்ணில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக முதல் விதையாக சிப்பாய் கலகம் இங்குதான் நடந்தது. அந்த கலகத்தில் 200 வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர். அந்த விதை தான் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் கிடைக்க செய்தது.
விரட்டும் விதை
அதேபோல் கொட்டும் மழையில் வேலூரில் விதைக்கும் இந்த விதை 50 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சியினரை விரட்டும் விதை. தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டம் இந்த மாவட்டம். 37 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டம். 13 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உள்ள இந்த மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் நாங்கள் பிரிக்க மாட்டோம் என்று தி.மு.க கூறியது.
மாற்றம் வேண்டும்
உலகத்தில் உள்ள 121 நாடுகள் இதைவிட மிகக்குறைந்த மக்கள் கொண்டவை. அந்த அளவுக்கு மக்கள் தொகை அதிகம் உள்ள ஒரு மாவட்டத்தை நாங்கள் பிரிக்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறினார். ஆனால் மாற்றம் தமிழ்நாட்டிற்கு வேண்டும். மாற்றத்தை நீங்கள் கொடுங்கள். முன்னேற்றத்தை நாங்கள் கொண்டு வருவோம்.
சைக்கிளில் பிரசாரம்
20 ஆண்டுகளுக்கு முன்பு வாலாஜாவில் இருந்து வாணியம்பாடி வரை 120 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று ‘பாலாற்றை காப்பேன்' என்று சைக்கிளில் பிரசாரம் செய்தார் மருத்துவர் ராமதாஸ். எந்த தலைவராவது அதை செய்தார்களா? பால் போன்ற இந்த பாலாற்றில் தண்ணீர் இல்லை. மணல் கூட கிடையாது. அதையும் கொள்ளையடித்து விட்டார்கள். மாற வேண்டும். மாற்ற வேண்டும்.
ஒரே ஒரு வாய்ப்பு.
50 ஆண்டு காலம் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு கொடுத்த ஆட்சியை, பா.ம.க.விற்கு வெறும் 5 ஆண்டுகாலம் கொடுங்கள். நல்ல திட்டங்களை கொடுப்போம். ஊழலற்ற கண்ணியமான ஆட்சியை அமைப்போம். காமராஜர் ஆட்சியை கொடுப்போம். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் காமராஜர் ஆட்சியை கொடுப்போம் என்று கூறுகின்றனர். காமராஜர் ஆட்சியை பா.ம.க.வால் மட்டுமே கொடுக்க முடியும் என்று நான் சவால் விடுகிறேன்.
முதல்வர் என்ன செய்கிறார்
இங்கு முதல்வர் இருக்கிறார். அவரை யாராவது சந்திக்க முடியுமா? ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போனில் தொடர்பு கொள்ளுவார். மாநிலத்தில் தொழில் தொடங்க தொழில் அதிபர்களை நேரடியாக சந்தித்து பேசுவார். அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறுவார்.
என்ன நடவடிக்கை எடுத்தார் முதல்வர்
கர்நாடக மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்காக அந்த மாநில முதல்வர் சித்தராமையா கோவைக்கு வருகிறார். தொழில் வாய்ப்புகளை கொண்டு வருவதற்காக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநாட்டுக்கு செல்கிறார். ஆனால் இங்குள்ள முதல்வர் தொழில் தொடங்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஊழலற்ற நிர்வாகம்
ஆனால் என்னால் மாற்றம் கொண்டு வர முடியும். மாவட்டந்தோறும் அமைச்சர்கள் கூட்டத்தை நடத்துவேன். முதல்வரே உங்களை வந்து சந்திப்பார். நாம் 50 ஆண்டு கால ஆட்சியை பின்பற்ற மாட்டோம். ஊழல் நிர்வாகத்தை இடித்து தள்ளிவிட்டு ஊழலற்ற நிர்வாகத்தை படைப்போம். இதை என்னால் செய்ய முடியும்.
அறுவை சிகிச்சை
இந்தியாவில் முதல் முறையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன் அறுவை சிகிக்சை செய்தது இந்த வேலூர் மண்தான். பாணாவரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்தான் அந்த சாதனையை படைத்தது. இதற்கு காரணம் ஆரம்ப சுகாதார மையத்தை நான் திறந்து வைத்தேன்.
மதுப்பழக்கம்
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை 4 வயது குழந்தையும் மது குடிக்க தொடங்கி உள்ளது. பெண்களும் மது குடித்து கொண்டிருக்கின்றனர். மாணவர்கள் மது குடிக்கின்றனர். இவ்வாறு குழந்தைகள், பெண்கள், மாணவர்களை மது குடிக்க வைத்ததற்கு கருணாநிதி, ஜெயலலிதா தான் காரணம். இது மன்னிக்க முடியாத குற்றம். மது 2 தலைமுறையை நாசப்படுத்தி உள்ளது.
மதுவிலக்கு
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாற்றம், பா.ம.க.கொண்டு பூரண மதுவிலக்கு தான். பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரு சொட்டு மது இருக்காது என்று மழையோடு மழையாக பேசி நிறைவு செய்தார் அன்புமணி.