மத்திய- மாநில அரசுகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போராட்டம்: வைகோ
சென்னை: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. கட்சி அலுவலகமான தாயகத்தில் உயர்மட்டக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் பொதுச்செயலர் வைகோ கலந்து கொண்டார். தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். திராவிட இயக்கத்தின் வரலாறு குறித்து தமிழகம் முழுவதும் கருத்துப் பட்டறை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
உயர்மட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருப்பூரில் மாநாடு
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா 2015 நவம்பரில் தொடங்குவதையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாளில் அறிவாசான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும் முதன் முதலாகச் சந்தித்த திருப்பூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா - திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டினை எழிலான கொட்டகை அமைத்து முழு நாள் மாநாடாக பெரும் சிறப்புடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் திராவிட இயக்க நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சியை திறக்க முடிவு.

மதிமுக கருத்து பட்டறை
வளரும் தலைமுறையினரான மாணவர்களையும், இளைஞர்களையும் திராவிட இயக்க இலட்சியங்களில் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாட்டை ஏற்படுத்த கருத்துப் பட்டறைகள் நடத்துவது என்றும்,
முதல் கருத்துப் பட்டறை ஆகஸ்டு 8, 9 தேதிகளில் ஈரோட்டில் நடத்துவது என்றும், இரண்டாவது பட்டறை 23, 24 தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்துவது என்றும் மூன்றாம் பட்டறை செப்டம்பர் 5, 6 தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

கூட்டு போராட்டம்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களை ஜூலை 4 ஆம் தேதி அன்று தாயகத்தில் சந்தித்து, இன்றைய மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து மக்கள் நலனைக் காக்க கூட்டு இயக்கப் போராட்டங்களை முன்னெடுக்க மதிமுக பங்கேற்க வேண்டி முன்வைத்த கோரிக்கையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொண்டு அத்தகைய போராட்டங்களிலும், அதற்காக நடைபெறும் பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது என உயர்நிலைக்குழு தீர்மானிக்கிறது.

20 தமிழர்கள் படுகொலை
இந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ஒரு குற்றமும் செய்யாத 20 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் கொடூரமாக சித்திரவதை செய்து சுட்டுப் படுகொலை செய்த கோரச் சம்பவத்தில் உண்மைகளை வெளிக்கொணர தேசிய மனித உரிமை ஆணையம் நடந்த சம்பவங்கள் கொலை வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டு, மத்தியப் புனலாய்வுத்துறை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இப்படுகொலைகளுக்குக் காரணமான ஆந்திர மாநில அரசு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தடை பெற்றுள்ளது.

மதிமுக கண்டனம்
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையையும் அநீதியையும் எதிர்த்து நீதியை நிலைநாட்டும் கடமையைச் செய்ய வேண்டிய தமிழ்நாட்டின் அண்ணா தி.மு.க. அரசு, குற்றவாளியான ஆந்திர அரசுக்கு அனைத்து வழிகளிலும் உதவிக்கொண்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களின் சார்பில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.

வியாபம் ஊழல்
நாட்டையே உலுக்குகின்ற மத்தியப் பிரதேச வியாபம் ஊழலின் பின்னணியில் 48 பேர் இதுவரை மர்மமான முறையில் மடிந்துள்ளனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று செய்திகள் வருகின்றன. மருத்துவக் கல்லூரியில்மாணவர் சேர்க்கை, அரசு பணியிடங்களுக்குகான தேர்வு இவற்றில் 2000 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகளும், ஊழலும் நடைபெற்று உள்ளது.

பாஜக பொய்முகம்
நேற்று முன்தினம் ஜூலை 6 ஆம் தேதி வரை சி.பி.ஐ. விசாரணைக்கு மறுப்புத் தெரிவித்த மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானின் கருத்தையே வழிமொழிந்து இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று கூறியதால் வெளிப்படைத் தன்மையையும், நேர்மையையும் பற்றி கூரைமேல் நின்று உரக்கக் குரல் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் பொய்முகம் அம்பலமாகிவிட்டது என்பதை நாட்டு மக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுட்டிக் காட்டுகிறது.

மது ஒழிப்பு விழிப்புணர்வு
தமிழகத்தில் காலம் காலமாக போற்றப்பட்ட நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடியோடு நிர்மூலம் செய்யும் விதத்தில் மது அரக்கனின் கொடுமை தாண்டவம் ஆடுகிறது. கல்லூரி மாணவர்கள், ஏன் பள்ளி மாணவர்களும் மதுப்பழக்கத்துக்கு ஆளாகி, விதை நெல்லே நாசமாகும் அபாயம் ஏற்பட்டுவிட்டது. சின்னஞ்சிறு பாலகனை மது அருந்த வைத்த மூவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்திருக்கிறதே! இலட்சக்கணக்கான குடும்பங்களைப் பாழ்படுத்தும் குற்றத்துக் காரணமான அண்ணா தி.மு.க. அரசின் மீது யார் வழக்குத் தொடுப்பது?

மராத்தான் போட்டி
முழுமையான மதுவிலக்கை இலக்காகக் கொண்டு 2004 இல் 1200 கிலோ மீட்டர் நடைப்பயணம், 2014 இல் 1500 கிலோ மீட்டர் நடைப்பயணம் என நாட்டின் கோடிக்கணக்கான மக்களிடம் விழிப்புணர்வை கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தiமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்தியது.
வளரும் தலைமுறையினரான கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் மதுவிலக்கை வலியுறுத்தும் வகையில் கோவை, சென்னை, திருச்சியில் மதுவிலக்கு மராத்தான் ஓட்டப்பந்தயங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியது.

மதுரையில் மராத்தான் போட்டி
இதில் கோவையில் 20 ஆயிரம் மாணவ-மாணவியர்களும், சென்னையில் 59 ஆயிரம் மாணவ -மாணவியர்களும், திருச்சியில் 42 ஆயிரம் மாணவ -மாணவியர்களும் கலந்து கொள்ளும் விதத்தில் தமிழகமே வியக்கும் வகையில் நடத்திக்காட்டியது. அதன் தொடர்ச்சியாக, மாணவர்கள் மட்டுமே பங்கேற்கின்ற மதுவிலக்கு மராத்தான் போட்டியை செப்டம்பர் 5ம் தேதி மதுரை புறநகர் மாவட்டத்தில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications