ஓட்டுக்கு துட்டு... இந்த முறை தில்லுமுல்லு நடக்காதா?... என்ன செய்திருக்கிறது ஆணையம்?
ஆர்.கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதே இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி.
சென்னை: பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்.கே நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணப்பட்டுவாடா நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் நடத்தபோது பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்த 39 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததிற்கான ஆவணங்கள் சிக்கின. பணப்பட்டுவாடா விவகாரத்தை காரணம் காட்டி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். ஆனால், தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்தமுறை பணப்பட்டுவாடா தொடர்பாக 32 வழக்குகள் பதியப்பட்டன. ஆனால், அவற்றில் பெரும்பாலான வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. அதேபோல், கைது செய்யப்பட்டவர்கள் சில நாட்களில் ஜாமினில் வெளியேவந்துவிட்டதால், வழக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆணையம் என்ன செய்யும்?
தமிழகத்தை பொருத்தவரை, இந்தியாவிலேயே அதிக பணப்புழக்கம் கொண்ட மாநிலம். தேர்தலின் போது அதிக பணம் சிக்கும் மாநிலம் கூட. கடந்த சட்டமன்றதேர்தலின் போது சுமார் 12 கோடி ரூபாய்வரை பணம் சிக்கியது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவைத்தடுக்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.

தெருத்தெருவாக சோதிப்பது சாத்தியமா?
இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் பேசியபோது, வருவாய்த்துறை, வருமானவரித்துறை, காவல்துறை ஆகியவை இணைந்து பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியின் சின்ன சின்ன தெருக்கள் அனைத்தையும் கண்காணிப்பில் கொண்டுவருவது சிரமமாக உள்ளது என்றார்.

காவல்துறை ஒத்தழைப்பு இல்லை
கடந்தமுறை உள்ளூர் காவல்துறை போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற புகாரை வருமானவரித்துறையின் தெரிவித்துள்ளனர். சோதனைக்கு போலீசார் முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த முறை வெளிமாநிலத்திலிருந்து பாதுகாப்பு படையை கொண்டு வந்து இறக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மீண்டும் நிறுத்தப்படாமல் இருந்தால் சரி
மேலும், சோதனைகள், பறக்கும் படையின் எண்ணிக்கைகள் அதிகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. ஆனால், வழக்கு விசாரணையின்போது ஏன் ஆர்.கே நகர் இடைத்தேர்தலை உடனடியாக நடத்தக்கூடாது என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் கேட்டது. வருடப்பிறப்பு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வருகிறது. இதனால் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் எனவே, தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது என்றது தேர்தல் ஆணையம். ஆனால், நீதிமன்ற உத்தரவை ஏற்று தற்போது தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.. என்னமோ... மீண்டும் பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் நிறுத்தப்படாமல் இருந்தல் சரி...












Click it and Unblock the Notifications