"தூ".. என்றால் என்ன?
சென்னை: "தூ".. தமிழின் பல சிறப்புகளில் ஒன்றான ஓரெழுத்து ஒரு மொழி என்பார்களே அதில் "தூ"வும் இடம் பெறுகிறது. தனித்தோ அல்லது சொல் விகாரமடைந்தோ வரும்போது அது ஒரெழுத்தில் பொருள் தரும்.
இந்த தூ.. இருக்கிறதே.. இதற்குப் பல அருமையான பொருட்கள் உண்டு. உண்மை, வாய்மை, மெய், வலிமை, தூய்மை என பல பொருள் வரும்.
இலக்கியப் பாடல்களில் இந்த தூ... வைத்து நிறைய பாடல்கள் உள்ளன. ஏன் திருக்குறளிலேயே கூட தூ.. இடம் பெறுகிறது.
"மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்".
இதற்கு என்ன பொருள் என்றால், ஒருவனுக்கு மனத் தூய்மையும், செய்யும் செயலில் தூய்மையும் என்பது, அவனுடைய இனத்தின் தூய்மையைப் பொறுத்து அமையும் என்பதாகும். வள்ளுவர் எப்படி யோசித்திருக்கிறார் பாருங்கள்...!
அதேபோல பதிற்றுப் பத்திலும் கூட ஒரு பாடல் வரி உண்டு. பதிற்றுப் பத்தில் 81வது பாடலில் வரும் 34வது வரி இந்த தூ.. குறித்துக் கூறுகிறது.
"தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடு
தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண் கொண்டு".
அதாவது எதிர்க்கும் தகுதி இல்லாத, வன்மையில்லாத வீரர் என்பது இந்த தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடு என்பதற்கு அர்த்தமாகும்.
அடுத்த வரியான தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண் கொண்டு என்பதற்கு என்ன அர்த்தம் என்றால், அப்படிப்பட்டவரை அரண் என தவறாக எண்ணிக் கொண்டு என்று அர்த்தம்.
தூ.. என்பது சாதாரண வார்த்தையாக இருந்தாலும் கூட இத்தனை அர்த்தம் உள்ளது.... !
ஏன் இகழ்ச்சியாகவும் இந்த தூ என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்பதும் தமிழின் சிறப்புகளில் ஒன்று.
உதாரணம்.. தூ.. நீ ஒரு மனிதனா?