அன்று வெங்கய்யா நாயுடு, இன்று ஆளுநர்... எங்கே போனது மாநில சுயாட்சி?
கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்ட ஆட்சியர், காவலர்களுடன் ஆலோசனை நடத்தி இருப்பது மாநில சுயாட்சி எங்கே என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
Recommended Video
சென்னை : தமிழகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஆளுநர் கோவை மாவட்ட ஆட்சியர், காவலர்களுடனான ஆய்வு கூட்டம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கை மாநில சுயாட்சியை பறிக்கும் செயல் என்ற கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் தமிழக அரசு இருக்கிறது என்பதை பல்வேறு அரசியல் கட்சியினரும் பல செயல்பாடுகளை சுட்டுக்காட்டினர். எனினும் விதிமுறைகளிலேயே இல்லாத வகையில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சராக இருந்த போது தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இந்நிலையில் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கை ஏற்கனவே எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல அமைந்துள்ளது.
ஆளுநரை வைத்து மிரட்டலா?
ஆளுநர் விதிகளை மீறி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ளார் என்பது சட்ட வல்லுநர்களின் கருத்து. புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இது போன்று அதிகாரிகளை சந்திப்பது, அவர்களுக்கு கட்டளையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அந்த மாநில அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையே ஏற்கனவே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது. பாஜகவின் சார்பாக அதன் ஊதுகுழலாக கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்பது புதுவை முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டு.
ஏன் திடீர் ஆலோசனை
இந்நிலையில் தமிழகத்திலும் அதே நிலையைத் தான் மத்திய அரசு செய்ய நினைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநில முதல்வர், துணை முதல்வர் இருக்கும் நிலையில் இவர்களை மீறி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆளுநர் திடீர் ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதே கேள்வி மாநில அரசுக்கும் எழுமா, இது குறித்து விளக்கம் கேட்குமா என்ற சந்தேகங்களுக்கு அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தான் பதில் சொல்லும்.
இருப்பை உணர்த்தும் பாஜக
மாநில சுயாட்சி கொள்கையில் என்றுமே சமரசம் செய்து கொள்ளாமல் இருந்தது தமிழகம். ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகான ஓராண்டில் எல்லாமே தலைகீழாகிவிட்டது. நேரடியாக தாமரை கோட்டையில் மலராத ஒரே குறை தான் மற்றபடி எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை அவ்வபோது நிரூபித்து வருகிறது பாஜக.
அரசின் பதில் என்ன?
இது வரை தமிழகத்தில் மத்திய அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டதற்கு ஏதோ மழுப்பலான காரணங்கள் ஆட்சியாளர்களால் சொல்லப்பட்டது. ஆனால் ஆளுநரின் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அவர்கள் அளிக்கப் போகும் விளக்கம் என்ன என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.