ராம்குமார் பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட சுதிர் குப்தா... யார் தெரியுமா?
சென்னை: ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது இருந்த எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா சற்று முக்கியமானவர். பல முக்கியமான மரண வழக்குகளில் இவரது பிரேதப் பரிசோதனை முடிவுகள் திடுக்கிடும் திருப்பங்களை ஏற்படுத்தியவை. தைரியமாக தனது முடிவை சொல்லக் கூடிய இவர், ராம்குமார் வழக்கிலும் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் சிறையில் இருந்த ராம்குமார் வாயில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் இது திட்டமிட்ட கொலை என்று உறுதியாகக் கூறிய ராம்குமாரின் தந்தை பரமசிவம், பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஹைகோர்ட்டில் பல்வேறு வகையில் பயணித்தது. இறுதியாக 3வது நீதிபதி கிருபாகரன், எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் பிரேத பரிசோதனையின் போது இருக்க உத்தரவிட்டிருந்தார். இதன் பிறகு பரமசிவம் சுப்ரீம் கோட்டை அணுகினாலும், இறுதியில் நீதிபதி கிருபாகரனின் தீர்ப்பான எய்ம்ஸ் மருத்துவரைக் கொண்டே பிரேத பரிசோதனை செய்வது உறுதியானது. இதனையடுத்து, எய்ம்ஸ் மருத்துவரான சுதிர் குப்தா, ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது உடன் இருக்க நியமிக்கப்பட்டார்.
சசிதரூர் மனைவி சுனந்தா கொலை
எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவராக இருந்த சுதிர் குப்தாதான் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் உடலை பிரேத பரிசோதனை செய்தவர். சுனந்தா புஷ்கர் நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், சுனந்தாவின் கைகள் மற்றும் கன்னத்தில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கொடுத்து அசத்தியவர்.
எய்ம்ஸ் தடயவில் துறை தலைவர் பதவி பறிப்பு
சுனந்தாவின் மரணம் இயற்கையானது என அறிக்கை அளிக்குமாறு சுதிர் குப்தாவிற்கு பல்வேறு நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர் அதை மறுத்தார். பலன், எய்ம்ஸ் மருத்துவமனை தடயவியல் துறைத் தலைவர் பொறுப்பிலிருந்து சுதிர் குப்தா நீக்கப்பட்டார்.
தமிழ்நாட்டை உலுக்கிய இளவரசன் கொலை
இதனைத் தொடர்ந்து தர்மபுரியில் மர்மமான முறையில் மரணமடைந்த தர்மபுரி இளவரசன் பிரேதப் பரிசோதனையில் பிரச்னை எழுந்தபோது, ஹைகோர்ட் ஒரு மருத்துவர் குழுவை நியமித்தது. அந்தக் குழுவிலும் சுதிர் குப்தா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எய்ம்ஸ் மாணவர் சரவணன் கொலை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த திருப்பூர் மாணவர் சரவணன், கல்லூரில் சேர்ந்த பத்தே நாட்களில் மர்மமான முறையில் அவரது அறையில் இறந்து கிடந்தார். எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா தலைமையிலான குழுவின் முன்னிலையில்தான் சரவணனின் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.
சரவணன் கொலையை உறுதி செய்தவர்
பின்னர், "எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சரவணன் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. சரவணன் உடலில் யாரோ விஷ ஊசியைச் செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான தடயங்கள் வலது மணிக்கட்டில் உள்ளது. மருத்துவம் தெரிந்தவராலேயே இந்த ஊசியைச் செலுத்த முடியும்'' என்று அந்தக் குழு அளித்த பிரேத பரிசோதனை அறிக்கை தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இப்போதும் ராம்குமார் பிரேத பரிசோதனையிலும்….
இந்நிலையில், கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ராம்குமாரின் மர்ம மரணத்தில் உள்ள உண்மைகளை வெளியே கொண்டு வர போராடிய ராம்குமாரின் தந்தை பரமசிவத்திற்கு கிடைத்த வெற்றிதான் ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது சுதிர் குப்தா இருப்பது. இவருடைய தொடர்ச்சியான செயல்பாடுகள் ராம்குமாரின் உறவினர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. என்றாலும் காத்திருப்போம் உண்மைக்காக...