இவர்தான் தமிழகத்தின் அடுத்த டிஜிபியா?
சென்னை: தமிழக காவல்துறையின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் விவாதங்களும், பரபரப்பும் ஏற்பட்டு விட்டது. காரணம், அரசியல் தலைமை சரியில்லாததே. இன்று புதிய டிஜிபியின் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் சரி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி, டிஜிபி நியமனம் உள்பட எந்த ஒரு நியமனமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதில்லை. ஆனால் இப்போது எல்லாமே இப்போது பரபரப்புதான். காரணம், ஸ்திரமான, திடமான ஒரு அரசியல் தலைமை இல்லை என்பதால்.
அந்த வகையில் டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில் அடுத்த டிஜிபி யார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. தங்களுக்குச் சாதகமான ஒருவரை டிஜிபியாக்க சிலர் முனைகிறார்கள். ஆனால் அதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இடையூறாக இருப்பதால் இதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
டிஜிபி ராஜேந்திரன்
டிஜிபி ராஜேந்திரன் பதவிக்காலம் ஜூன் 15ல் முடிவடைந்துள்ளது. இருப்பினும் விதிமுறைகளின்படி அவர் இன்றுடன் பணியிலிருந்து விடைபெறுகிறார். அவருக்குப் பதவி நீட்டிப்பு தர மாநில அரசு விரும்புகிறது. ஆனால் வேறு சில தரப்பிலிருந்து அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சீனியாரிட்டி பட்டியல்
தற்போது டிஜிபி பதவிக்கான சீனியாரிட்டி பட்டியலில் அர்ச்சனா ராமசுந்தரம், ராதாகிருஷ்ணன், கே.பி.மகேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் உள்ளனர். இதில் மகேந்திரனைத் தவிர மற்ற அனைவருமே விரைவில் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். மகேந்திரனுக்கு 2019ல்தான் ஓய்வு வருகிறது.
சுப்ரீம் கோர்ட் விதி
டிஜிபியாக நியமிக்கப்படுபவருக்கு 2 ஆண்டு பதவிக்காலம் குறைந்தது இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் மகேந்திரனுக்கு மட்டுமே தற்போதைக்கு வாய்ப்புள்ளது. அவரை மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
டெல்லியில் ஆலோசனை
புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவருடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். தற்போது இப்பட்டியலில் ஜாங்கிட் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இன்று புதிய டிஜபி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.