யார் இந்தப் பாரிவேந்தர்.. ? சாதாரண மனிதர் To சக்சஸ்புஃல் மேன் வரை!

Subscribe to Oneindia Tamil

"நான் மகாத்மா காந்தி அல்ல. ஆனால் என் வாழ்க்கையிலும் எத்தனையோ சத்திய சோதனைகள் ஏற்பட்டுள்ளது" என்கிறார் இந்தப் பாரிவேந்தர்.

தன்னை ஒரு சாமானியன் என்று சொல்லிக் கொள்ளும் இந்தப் பாரிவேந்தர் பச்சமுத்து பிறந்தது தாண்டவராயபுரம் என்ற ஒரு சின்ன கிராமம். இன்றுகூட சின்ன கிராமம்தான். 1941 இல் ஊரில்தான் பிறந்தார்.

Who is this Paarivendhar A success story

ராசிபுரம் - ஆத்தூர் இடையே செல்லும் பிரதான சாலையில்தான் இந்தச் சிற்றூர் இருக்கிறது. பாரிவேந்தர் பிறந்த காலத்தில் இங்கே வெறும் 200 குடும்பங்கள் தான் இருந்தன. அவை இன்றைக்கு 5 ஆயிரம் பேர் வசிக்கக் கூடிய ஊராக வளர்ந்திருக்கிறது.

இவரின் அப்பா பெயர் ராமசாமி உடையார். அம்மா வள்ளியம்மாள். இந்தத் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் இவர். பெற்றோர் வைத்த பெயர் பச்சமுத்து. இன்று அவர் பாரிவேந்தர்.

தந்தை ஒரு விவசாயி. அதிகம் படிக்காத அவர், கிராமத்தில் விளைகின்ற கடலை பயிர்களைக் கொள்முதல் செய்து, அதைச் சேலத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார். இந்தத் தொழில் அதிக நாட்கள் நடைபெறவில்லை.

Who is this Paarivendhar A success story

ஒருமுறை வியாபாரத்திற்காகச் சென்று கொண்டிருந்த ராமசாமி, விபத்தில் சிக்கி மரணத்தைத் தழுவினார். அப்போது பச்சமுத்துவுக்கு 3 வயது.

ஆம்! இளம் வயதிலேயே அப்பாவை இழந்தார் பச்சமுத்து.

கணவனின் ஆதரவை இழந்த வள்ளியம்மாள் தன் குழந்தைகளைக் கரைசேர்க்க விவசாயக் கூலியாக வயல் வேலைக்குச் சென்றார். கிடைத்த சொற்ப கூலியைக் கொண்டு தனது மூன்று குழந்தைகளை வளர்த்தார்.

சொந்த வீடு இல்லை. சிறு நிலம் இல்லை. ஆனால், வறுமையை விரட்டும் வைராக்கியம் மட்டும் இருந்தது இவரது அந்த ஏழைத் தாய்க்கு.

Who is this Paarivendhar A success story

அதே ஊரிலிருந்த அரசுப் பள்ளியில் பச்சமுத்துவும் அவரது அண்ணனும் படித்தனர். வறுமை காரணமாக ஐந்தாம் வகுப்புடன் படிப்பை மூட்டைக் கட்டி வைத்து விட்டு, வயல்வேலைக்குச் சென்றார் பச்சமுத்துவின் அண்ணன்.

அதன்பின்னர் ஆறாம் வகுப்பு படிக்க ஆத்தூர் சென்றார் பச்சமுத்து. ஆத்தூர் பள்ளியில் வைக்கப்பட்ட நுழைவுத் தேர்வை அவரால் எழுத முடியவில்லை. தோல்வி அடைந்தார்.

அடுத்த வாரமே மீண்டும் ஒரு நுழைவுத் தேர்வு எழுதினார். இந்த முறை வெற்றி உறுதியானது. அரைக்கால் டவுசருடன் ஆறாம் வகுப்பில் சேர்ந்தார்.

அரசுப் பள்ளியாக இருந்தாலும் மாதக் கட்டணமாக நான்கே முக்கால் ரூபாய் கட்ட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் பாதிக் கட்டணம்.

Who is this Paarivendhar A success story

வயிற்றுப் பசிக்கே வீட்டில் திண்டாட்டம். இதில் அறிவுப் பசிக்கு எங்கே போவது? அந்தக் கல்விக் கட்டணத்தை பச்சமுத்துவின் சின்னம்மா கொடுத்தார். அப்படிப் படித்து பத்தாம் வகுப்பில் 60% மதிப்பெண் பெற்றார் பச்சமுத்து.

அடுத்து திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி. 1957 இல் பியூசி முதலாம் ஆண்டு சேர்ந்தார். முடித்தது பொறியியல் படிக்க விருப்பம் வந்தது. அந்தக் காலத்தில் மொத்தம் எட்டு பொறியியல் கல்லூரிகள் இருந்தன.

அதில் ஒரு கல்லூரியிலிருந்து பச்சமுத்துவுக்கு அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வை இந்தக் கிராமப்புற மாணவனால் சரியாக எழுத முடியவில்லை.

இடம் கிடைத்தால் ஈபி ஆபீசில் பில் கலெக்டர் வேலைக்குப் போக என சிற்றப்பா யோசனை கொடுத்தார். அதற்கு இவரது மனம் இடம்தரவில்லை. கடைசியில் பியூசிக்குப் பின்னர் பிஎஸ்சி கணிதம் படித்தார்.

இந்தக் காலகட்டங்களில் ஓட்டப் பந்தயங்களில் படிப்புக்கு இணையாக அதிகம் கவனம் செலுத்தினார். தமிழ்நாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று சில பரிசுகளைத் தட்டிக் கொண்டு வந்தார்.

தினம் மூன்று பச்சை முட்டைகளை உடைத்துக் குடித்து விட்டு ஓடி பயிற்சி எடுத்து வந்தார். அந்த மைதானத்தின் அருகேதான் காஜா மியான் ஹாஸ்டல் ரேஸ் கோர்ஸ் இருந்தது. அந்த ரேஸ் கோர்ஸ்தான் தன் வாழ்க்கை வருங்காலத்தில் மாற்றி அமைக்கப் போகிறது என்பதை மாணவராக இருந்த பச்சமுத்து நினைத்திருக்கவில்லை.

Who is this Paarivendhar A success story

படித்து முடித்த 30 ஆண்டுகள் கழித்து 1995 இல் ரேஸ் கோர்ஸ் விருந்தினர் மாளிகைக் குத்தகைக்கு விடப்படும் என்று அரசு விளம்பரம் செய்தது. அதைப் பார்த்தார் பச்சமுத்து. விருந்தினர் மாளிகையைச் செப்பனிட்டு, தஞ்சையில் நடைபெற உள்ள எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு வருகை தர உள்ள விருந்தினர்களுக்கு 25 அறைகளைத் தயார் செய்ய வேண்டும் எனக் கூறி இருந்தது அரசு.

அந்த ஒப்பந்தத்தை எடுத்து ஒரு மாதத்திற்குள் 25 வில்லாக்களைக் கட்டி முடித்தார் பச்சமுத்து.

மொத்தம் 30 ஆண்டுகள் ஒப்பந்தம். இன்றைக்கு 160 அறைகளுடன் 4 நட்சத்திர விடுதிகள் அங்கே செயல்பட்டு வருகின்றன. அதற்கான முதல் விதையைப் போட்டவர் பச்சமுத்து.

திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்த பிறகும், பச்சமுத்துவுக்குளிருந்த பொறியியல் ஆசை அடங்கவில்லை. ஆகவே ஒரு பேராசிரியரின் அறிவுரையை ஏற்று பி.இ. படிப்புக்கு இணையான ஏ.எம்.ஐ.இ படிப்பதற்காகச் சென்னை வந்தார். அதற்கான கட்டணம் 1961இல் 4 ஆயிரம். அதைச் சிற்றப்பா கொடுத்து உதவினார். ஊரிலிருந்து 7 ரூபாய் ரயில் டிக்கெட் எடுத்து சென்னை வந்து சேர்ந்தார்.

அன்று இவர் சென்னையில் ஏ.எம்.ஐ.இ படிப்பைப் படித்த கல்லூரிதான் இன்று மீனாட்சி கல்லூரி என்று மாறி இருக்கிறது. பச்சமுத்து மாலை நேரக் கல்லூரியில் படித்தார். பகல் முழுக்க அவருக்கு அதிக நேரம் இருந்தது. அதைப் பயனுள்ளதாக மாற்ற விரும்பினார்.

அந்த நேரத்தில்தான் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கணித ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டார். ஆசிரியராக திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் போய் பணியாற்றத் தொடங்கினார்.

Who is this Paarivendhar A success story

மாலையில் படிப்பு. காலையில் வேலை. ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்தார். வெற்றி வீட்டுக்கே இவரைத் தேடி வந்தது.

ஏ.எம்.ஐ.இ முடித்தவுடன் 1967இல் 27 வயதில் திருமணம். அப்போது அவரது அத்தை மகள் ஈஸ்வரியை மணந்தார். அவருக்கு அப்போது 15 வயது.

திருமணம் முடிந்த கையோடு மீண்டும் சென்னை வந்தார். மனைவியோடு அல்ல; தனியாக. நண்பர்கள் காதர் மொய்தீன், துரைராஜ் இவர்களுடன் டிநகரில் உள்ள சரோஜினி திருவில் ஒரு வாடகை வீடு எடுத்துத் தங்கி, பணியாற்றி வந்தார். இப்படி சில வருடங்கள் சென்றது.

அதன்பின்னர் 1967இல் மனைவியுடன் 50 ரூபாய் வாடகையில் மாம்பலம் கிரி தெருவில் குடியேறினார். அடுத்து திருவொற்றியூரிலிருந்த மாநகராட்சி பள்ளியில் கணித ஆசியர் வேலை கிடைத்தது. சம்பளம் 150ரூபாய்.

காலை எட்டு மணிக்குள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவர் தங்கி இருந்த மாம்பலத்திலிருந்து ரயில் பிடித்து தினம் போக வேண்டும். மாலை 6 மணிக்கு வீடு திரும்புவார். அப்போது அவர் சோர்ந்து விடவில்லை. 6 மணிக்கு மேல் என்ன செய்யலாம் என யோசித்தார்.

பொழுதைப் பயனுள்ளதாக மாற்ற தமிழ்நாட்டு டுட்டோரியல் என்ற கல்விச்சாலையைத் தொடங்கினார். 10 மற்றும் 12 வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களைக் குறிவைத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்.

இப்படி 1 வருடம் நடந்தது. அது நஷ்டமானது. உடன் இருந்த பங்குதாரர் ஒருவர் விலகிக் கொண்டார். குடும்ப பாரத்துடன் டுட்டோரியல் சுமையும் பச்சமுத்து தலையில் விழுந்தது.

அப்போது சென்னை செங்கல்வராயன் தொழில் நுட்பக் கல்லூரியில் கணித ஆசிரியர் தேவை என விளம்பரம் ஒன்று இவரது கண்ணில் பட்டது. அதில் 50 பேர்களில் ஒருவராக நேர்காணலில் கலந்து கொண்டார். வாய்ப்பு இவர் பக்கம் வந்தது. மாதம் 254 ரூபாய் சம்பவம். 150லிருந்து 254 என மேல் நோக்கி வளர்ந்தது.

காலப் போக்கில் பாலிடெக்னிக்கை விட டுட்டோரியல் வருமானம் பலமடங்கு அதிகமானது. எனவே 1967இல் தனியாகப் பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினார் பச்சமுத்து.

பின்னர் டிநகரில் Nightingale என்ற பெயரில் ஆங்கில வழி ஆரம்ப பள்ளியைத் தொடங்கினார். முதல் ஆண்டு 25 மாணவர்கள் சேர்ந்தனர். 6 ஆசிரியர்களைப் போட்டு பள்ளியை நடத்தினார். ஒரு மாணவருக்கு மாதம் 7 ரூபாய் கட்டணம்.

அதில் என்ன விசேஷம் என்றால், இந்த 7 ரூபாயில் வீட்டிலிருந்து மாணவனை அழைத்து வரவும் திரும்பிக் கூட்டிச் செல்லவும் ரிக்‌ஷா செலவும் அடக்கம். பெரிய வருமானம் இல்லை. டுட்டோரியலில் வந்த லாபத்தை வைத்து 5 ஆண்டுகள் பள்ளியை நடத்தினார்.

அதனால் என்ன பலன் என்கிறீர்களா? அந்த 5 ஆண்டுகளில் 1500 மாணவர்கள் படிக்கும் அளவுக்குப் பள்ளி நிர்வாகம் வளர்ச்சியடைந்தது. அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு இப்போது எஸ் ஆர் எம் மருத்துவமனையும் Nightingale பள்ளியும் இயக்கி வரும் இடத்தை 1975இல் சொந்தமாக வாங்கினார்.

Who is this Paarivendhar A success story

இவரது மூன்று பிள்ளைகளையும் இதே Nightingale பள்ளியில்தான் படிக்க வைத்தார். 1976 காலகட்டத்தில் இந்தப் பள்ளியில் 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் அளவுக்குப் பள்ளி நிர்வாகம் மாபெரும் வளர்ச்சியை அடைந்தது. இந்த வருமானம் நிலையானதால், பாலிடெக்னிக் ஆசிரியர் வேலைக்கு 'குட்' பை சொன்னார் பச்சமுத்து.

1976இல் நைட்டிங்கேல் பள்ளி மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியாகத் தர உயர்த்தினார். 1984 இல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலம். கல்வி அமைச்சராக அரங்கநாயகம் இருந்தார்.

அப்போது தனியாருக்கு பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்க முடிவு செய்தது அரசு. 4 பேரிடம் தலா 4 லட்சம் கடனாகப் பெற்று தொழில்நுட்பக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். வாங்கிய பணத்தை 3 மாதத்தில் திரும்ப ஒப்படைத்தார்.

தனது கல்வி நிறுவனத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசனை வந்தது. ஸ்ரீ ராமசாமி மெமோரியல் என அப்பா பெயரைச் சுருக்கி எஸ்.ஆர்.எம். என வைத்தார். இது 1985இல் தொடங்கப்பட்டது. இதுதான் எஸ்.ஆர்.எம். என்ற கல்வி நிறுவனத்தின் மாபெரும் தொடக்கமாக அமைந்தது.

முதலில் மாம்பலம் பள்ளியிலேயே இந்தப் பொறியியல் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் காட்டாங்குளத்தூர் அந்தப் பொறியியல் கல்லூரி மாற்றப்பட்டது. இன்று அது ஒரு தனிப் பல்கலைக்கழகமாக உலகம் முழுவதும் புகழ்ப் பரப்பி வருகிறது.

அதன் அருகிலேயே வள்ளியம்மை தொழில்நுட்பக் கல்லூரி கட்டப்பட்டது. இது பச்சமுத்துவின் அம்மாவின் பெயர், அதன்பின்னர் மனைவி பெயரில் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி உருவானது.

கல்வி நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் தனியார் பேருந்து நிறுவனங்கள், ஹோட்டல்கள், மென்பொருள் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் எனப் பல துறைகளில் இவரது சாம்ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கிறது.

அன்று இவர் சாதாரண பகுதிநேர அரசுப் பள்ளி ஆசிரியர்; இன்று பல நாடுகளில் கல்வி நிறுவனங்களை நடத்திவரும் வேந்தர்.

இவர் அரசியல் கட்சி ஆரம்பித்தது ஏன்? அடுத்த பகுதியில் அதைப் பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+