1989-ல் இரட்டை இலை முடங்கியதும் ஜெ. சேவல் சின்னத்தை தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா?சுவாரசிய ப்ளாஷ்பேக்
1989-ல் இரட்டை சிலை சின்னம் முடங்கியதால் ஜெயலலிதா, சேவல் சின்னத்தை தேந்தெடுத்தற்கு சுவாரசிய காரணங்கள் உண்டு.
சென்னை: 1989-ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதும் ஜெயலலிதாவும் ஜானகியும் சேவல் மற்றும் இரட்டை புறா சின்னங்களைத் தேர்ந்தெடுத்ததில் சுவாரசிய பின்னணி இருக்கிறது.
1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் ஜானகி அணி தலைமையில் ஒரு அணியும் உருவாகின.
1989 ஜனவரி சட்டசபை தேர்தலுக்காக இரு அணிகளுமே இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இதனால் 1988 இறுதியில் இரட்டை சிலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.
இரட்டை புறா
இதனால் ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகள் புதிய சின்னத்தை தேர்ந்தெடுத்து உடனே மக்களிடத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய நெருக்கடிக்குள்ளாகின. அப்போது ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னத்தை ஆர்.எம். வீரப்பன் தேர்வு செய்தார்.
ஜோதிடர் ஆலோசனை
இரட்டை இலை சின்னத்தை உச்சரிப்பது போல இரட்டை புறா இருக்கும் என்பதற்காக இது தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா தரப்போ, சேவல் சின்னத்தை தேர்வு செய்தது. சேவல் என்பது வெற்றியின் சின்னம்; அதாவது தமிழ்க் கடவுளான முருகனின் வெற்றி சின்னம்; ஜாதக ரீதியாகவும் மத நம்பிக்கையின் அடிப்படையிலும் சேவல் கை கொடுக்கும் என அச்சின்னத்தை ஜெயலலிதா அணி தேர்வு செய்தது.
பறந்தன சின்னங்கள்
போயஸ் கார்டனில் சேவல் சின்ன கொடியை பறக்கவிட்டு பூஜை செய்த கதைகளும் அரங்கேறின. அத்துடன் தேர்தல் பிரசாரத்தின் போது இரட்டை புறாக்களை பறக்கவிடுவது; சேவல்களை பறக்கவிடுவது என அமர்க்களப்படுத்தினர் அதிமுகவினர்.
விலங்குகளுக்கு தடை
இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கும் போனது. இதனைத் தொடர்ந்துதான் உயிருள்ள விலங்குகளை தேர்தல் சின்னமாக ஒதுக்குவதில்லை என தேர்தல் ஆணையமும் முடிவெடுத்தது. வரலாறுதான் எத்தனை விசித்திரங்களை தன்னுள் கொண்டிருக்கிறது!