அதிமுகவில் அடுத்தடுத்து 'கல்தா' கொடுக்கப்பட்ட நாலு 'சாமி'கள்.. ஏன் ஏன்?
சென்னை: அதிமுகவில் முன்னாள் எம்.பி மலைசாமி, அமைச்சர் முனுசாமி, மாவட்ட செயலாளர் சிவசாமியை அடுத்து வேலுச்சாமியின் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் 3 தொகுதிகளில் தோல்வியை அடுத்து அதிமுகவில் அமைச்சர்கள் மாற்றத்தோடு மாவட்ட செயலாளர்களின் கட்சிப்பதவிகளும் பறிக்கப்பட்டன.
மழை விட்டும் தூவனம் விடாத கதையாக வென்ற தொகுதிகளும் களையெடுப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோவையில் மாவட்ட செயலாளர் செ.ம.வேலுச்சாமிக்கு கொடுக்கப்பட்ட கல்தாதான் லேட்டஸ்ட் பரபரப்பு.
மலைச்சாமிக்கு கல்தா
தேர்தல் முடிவினை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது, மோடி பிரதமரானால் அவருடன் நெருக்கமான உறவை ஜெயலலிதா பேணுவார்" என்று கருத்து தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மலைச்சாமியை கட்சியில் இருந்தே அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா.
முனுசாமிக்கு மூணும் போச்சே
தேர்தல் முடிவுக்குப் பின்னர் தர்மபுரி தொகுதியின் தோல்வி முதலில் முனுசாமியை தாக்கவில்லை. ஆனால் படிபடியாக பற்றவைக்கப்பட்ட தகவல்கள் துறைமாற்றத்தில் தொடங்கியது. தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்து நீக்கம், மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு, அமைச்சர் பதவியில் இருந்து கல்தா வரை போனது.
சிவசாமிக்கு எல்லாம் போனது
திருப்பூர் மாவட்ட செயலாளராக இருந்த சிவசாமியின் கதையோ பரிதாபம், வாய் துடுக்குப் பேச்சினால் அவர் இழந்தது மாவட்ட செயலாளர் பதவி மட்டுமல்ல, கட்சியில் இருந்தே தூக்கப்பட்டுவிட்டார்.
செ.ம.வேலுச்சாமி பரிதாபம்
ஆனால் கோவை லோக்சபா தொகுதியில் முதன்முறையாக அதிமுக போட்டியிட்டு வெற்றிவாகை சூடியும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் செ.ம.வேலுச்சாமி. அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதால் மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் வேலுச்சாமி.
முதன்முதலாக போட்டி
கோவை லோக்சபா தொகுதியில் இதுவரை அதிமுக போட்டியிட்டதில்லை. ஆனால் இம்முறை நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. வழக்கறிஞர் ஏ.பி. நாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள்
கோவை லோக்சபா தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5-இல் அதிமுகவினர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். மேலும், கோவை மாநகராட்சி மேயராக அதிமுகவைச் சேர்ந்த செ.ம.வேலுசாமி இருந்தார். மாநகராட்சியிலும் அதிமுக அசுர பலத்துடன் உள்ளது.
குறைந்த வாக்கு வித்தியாசம்
எனவே அதிமுக வேட்பாளர் ஏ.பி. நாகராஜன் 42,016 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை வென்றார். வாக்குவித்தியாசம் குறைந்த காரணம் பற்றி தலைமை விசாரித்த போது எல்லோரின் கையும் செ.ம.வேலுச்சாமி பக்கமே நீண்டதாம். எனவேதான் பதவிக்கு கல்தா கொடுக்கப்பட்டது என்கின்றனர்.
தேர்தல் மட்டுமே காரணமா?
மூன்று சாமிகளும் வரிசையாக கட்சித்தலைமையால் நடவடிக்கைக்கு ஆளானதற்கு லோக்சபா தேர்தல் மட்டும் காரணம் இல்லை என்கின்றனர் கழக உடன்பிறப்புக்கள். தேர்தல் செலவுகணக்கு வழக்குகளை சரியாக ஒப்படைக்காததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இன்னும் யார் யார் தலை உருளப்போகிறதோ? ஜெயித்தும் திக் திக் பயத்தில் இருக்கின்றனர் அதிமுகவினர்.