திருமாவளவனுடன் வைகோ சேர்ந்தது பிடிக்கலை.. ஜோயல் விலகலுக்கு இதுதான் காரணமாம்!
சென்னை: எம்.பி பதவி கிடைக்கும், குறைந்தது எம்.எல்.ஏ. பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தும், வைகோ திமுக, அதிமுக என யாருடனும் கூட்டணி சேராததால் ஏற்பட்ட ஏமாற்றம், தனியாக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியது. அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை சேர்த்தது ஆகிய காரணங்களால்தான் தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த ஜோயல் கட்சியை விட்டு விலகி திமுகவுக்குப் போக முக்கியக் காரணம் என்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல் தலைமையில் நெல்லை மாவட்ட செயலாளர்கள் சரவணன் (புறநகர்), பெருமாள் (மாநகர்) மற்றும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லைசெல்வம் ஆகியோர் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். இது தென்மாவட்ட மதிமுகவினர் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பதற்கேற்ப தேர்தல் வருவதற்கு முன்பாகவே அரசியல் களத்தில் எந்தஎந்த கட்சியினர் யார்-யாருடன் கூட்டணி அமைப்பார்கள், எத்தனை அணிகள் போட்டிக்களத்தில் இருக்கும் என்பது போன்ற பரபரப்பு நிலவி வருகிறது.
"110 அரசு"
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த நான்கரை வருடகாலமாக நடைபெற்றுவரும் அதிமுக தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கான உருப்படியான திட்டங்கள் எதுவும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. சட்டசபையில் 110விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வெறும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது என்பதை அனைத்து மக்களும் அறிவார்கள்.
கொலைகள் - பலாத்காரங்கள்
இதற்கிடையே தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றசம்பவங்களும், தென்மாவட்டங்களில் ஜாதி ரீதியிலான மோதல்களும் அதிகரித்து வருகிறது. அரசின் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தினால் காவல்துறையின் செயல்பாடுகளும் சரிவர இல்லை.
தட்டிக்கேட்க ஆளில்லை
இப்படிப்பட்ட சூழலில் தவறு செய்யும் அரசை யாரும் தட்டிக்கேட்க முடியாத வகையில் இந்த அரசானது மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்தமாதம் தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பலமாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
வெள்ளத்தால் வந்த வேதனை
தலைநகரமான சென்னை மற்றும் கடலூர் தண்ணீரில் மிதந்து தத்தளிக்க மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி போனதுடன் பலகோடிக்கணக்கில் பெரும் இழப்பும் ஏற்பட்டது. இதனைக்கூட இந்த அதிமுக அரசால் எளிதில் சீர்செய்யமுடியவில்லை. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் இன்றும் உரியநிவாரணம் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
ஒற்றுமை இல்லாத எதிர்க்கட்சிகள்
இதுமாதிரியான செயல்பாடு இல்லாத அதிமுக அரசை எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் இருந்து வீழ்த்திடவேண்டுமெனில் எதிர் அணியினர் அனைவரும் ஒற்றிணைந்து தேர்தலில் களம் இறங்கவேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.
மதிமுகவினரின் திமுக பாசம்
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் நம்மை காக்க வைத்து கடைசி நேரத்தில் அவமானப்படுத்தி வேண்டுமென்றே கூட்டணியில் இருந்து வெளியேற்றி தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்த அதிமுக அரசை வீழ்த்தவேண்டுமெனில் திமுகவோடு இணைந்து செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஷாக் கொடுத்த வைகோ
இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஆதரித்து ஆதரவான கருத்தை கூறினார். இதற்கிடையே வைகோ திடீரென்று கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிவற்றுடன் இணைந்து ''மக்கள் நலக்கூட்டு இயக்க''த்தை உருவாக்கினார். இந்த மக்கள் நலக்கூட்டு இயக்கம் வரும் சட்டமன்ற தேர்தலில் 3வது அணியாக களம் இறங்கும் என்று வைகோ அறிவித்தார். சில நாட்களில் மனிதநேய மக்கள் கட்சி இந்த இயக்கத்தில் இருந்து வெளியேறிவிட்டது.
அதிமுகவுக்கு சாதகமாகி விடுமே
வைகோவின் இந்த திடீர் அறிவிப்பு மதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதிமுக மூன்றாவது அணியாக களம் இறக்கும் சூழலில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நம்மை அவமானப்படுத்திய அதிமுகவின் வெற்றிக்கு இது சாதகமாக அமைந்துவிடும். எனவே இந்த முடிவினை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் வைகோவிடம் வலியுறுத்தினர். ஆனால் ஏனோ இதனை வைகோ ஏற்கவில்லை.
முதலில் விலகிய மாசிலாமணி
இதனால் அதிருப்தியடைந்த மதிமுக பொருளாளர் மாசிலாமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் வைகோவின் முழுநம்பிக்கையை பெற்றவரும், தென்னகத்தில் நாடார் சமூகத்தில் மிகவும் பிரபலமானவரும், தென்மாவட்ட மதிமுகவின் முக்கிய தலைவராகவும் விளங்கி வந்த தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் அடைக்கலமாகியுள்ளார். இது தென்மாவட்ட மதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடார் சமூகத்தின் செல்லப் பிள்ளை ஜோயல்
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த சாமுவேல்நாடாரின் 2வது மகன் தான் எஸ்.ஜோயல். 8ம் வகுப்பு படிக்கும் போதே ஜோயல் உடன்குடி ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளராக இருந்து பணியாற்றி வந்தார். கடந்த 1993ம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோ வெளியேறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இந்தநேரத்தில் சேலம் சட்டக்கல்லூரியில் படித்த ஜோயல் வைகோவுடன் தன்னை இணைத்துக்கொண்டார். அந்தநேரத்தில் வைகோவை அழைத்துவந்து சேலம் சட்டக்கல்லூரி முன்பு மதிமுகவின் முதல்கொடியை ஏற்றிவைத்த சாதனையை நிகழ்த்தியவர் ஜோயல்.
நம்பிக்கை நட்சத்திரம்
வைகோவின் நம்பிக்கை நட்சத்திரமான ஜோயல் தனது 30வது வயதில் அதாவது கடந்த 2005ம்ஆண்டு தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டார். இளம்வயதிலேயே மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ஜோயல் அன்று முதல் இன்று வரை தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக கட்சி பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி என்றால் ஜோயல்தான்
மாவட்டத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள், ஆண்டுவரும் கட்சிகள், ஆளாத கட்சிகள் கூட செய்திடாத வகையில் சிறப்பான, பிரமிக்கும் வகையிலான கட்சி கூட்டங்கள், மாநாடு, மாநிலபொதுக்குழு கூட்டங்களை நடத்தியும், மக்கள் பிரச்னைகளுக்காக போராடியும் வைகோ மனதில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.
ஜாதி பாகுபாடு பார்க்காதவர்
தனது திறமையான, தைரியமிக்க மக்கள் பணிகளாலும், தென்மாவட்டத்தில் நாடார் சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரான போதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை எல்லாம் பாகுபாடு இன்றி தனது சகோதரர்களாக அரவணைத்து திறம்பட கட்சி பணியாற்றி வரும் ஜோயல் வைகோவால் ''கரும்சிறுத்தை, கருப்புவைரம், மாவீரன்'' என்று அழைக்கப்பட்டார்.
விவசாயிகளின் தோழன்
தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்துவந்த ஜோயல் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத்தரப்பு மக்களின் பிரச்சனைகளுக்கும் முதல் ஆளாய் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி குரல் கொடுத்து தொடர்ந்து போராடி வருகிறார். பொதுமக்கள், விவசாயிகள் பிரச்னைகள் தீர்வதற்காக போராட்டங்களை நடத்தி பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைத்திடவும் வழிவகுத்துள்ளார்.
நற்பெயருடன்
தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருவதால் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களிடத்திலும் ஜோயல் நற்பெயர் பெற்று திகழ்கிறார். மக்களுக்கான போராட்டங்களின் மூலமாக மக்கள் மனதில் தனிசெல்வாக்கு பெற்றுள்ள ஜோயல் கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது தூத்துக்குடி தொகுதியில் மதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிட்டது குறிப்பிடதக்கதாகும்.
ஸ்ரீவைகுண்டம் அணைப் போராட்டம்
கடந்த 100வருடத்திற்கும் மேலாக தூர் வாரப்படாமல் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயனிற்றி கிடந்த ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கான உத்தரவினை தேசிய பசுமை தீர்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து போராடி பெற்றுத்தந்து தூர் வார வைத்த பெருமைக்குரியவர் ஜோயல். இதன்மூலம் ஜோயல் விவசாயிகளின் பாதுகாவலனாக திகழ்ந்து வருகிறார்.
வைகோ மீது அதிருப்தி
மாவட்டத்திலுள்ள அனைத்துப்பகுதி மக்களின் பிரச்சனைகளையும் கண்டறிந்து அது தீர்வதற்காக முதல் ஆளாக குரல் கொடுத்து வரும் ஜோயல் மக்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இந்நிலையில், மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல் வைகோவின் முரண்பாடான தேர்தல் முடிவை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
பதவி கிடைக்காதது முதல் அதிருப்தி
எம்.பி. பதவியை பெரிதாக எதிர்பார்த்துக் காத்திருந்தாராம் ஜோயல். ஆனால் வைகோ் திமுக, அதிமுக என எந்தக் கூட்டணியிலும் நிலையாக இல்லாததாலும் பொசுக் பொசுக்கென்று வெளியேறியதாலும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தி அடைந்துள்ளார் ஜோயல்.
திருமாவை சேர்த்தது இன்னொரு அதிருப்தி
இந்த சமயத்தில் வைகோ உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியில் திருமாவளவனை சேர்த்ததும் ஜோயலுக்குப் பிடிக்கவில்லையாம். திருமாவை நீக்கினால் கூட நான் கட்சியிலேயே தொடர்கிறேன் என்று வைகோவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் வைகோ அதை நிராகரித்து விட்டதால் திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டதாக கூறுகிறார்கள்.
"முரட்டு பக்தர்" சும்மா இருப்பாரா?
எப்படியோ மதிமுகவுக்கு ஒரு முக்கியத் தளபதி பறி போய் விட்டார், திமுகவுக்குப் பெரிய பலம் கிடைத்துள்ளது. ஆனால் தூத்துக்குடி திமுக என்றாலே முரட்டு பக்தர் என்று கருணாநிதியால் செல்லமாக அழைக்கப்படும் பெரியசாமி ராஜ்ஜியம்தான். ஜோயலை சுதந்திரமாக செயல்பட அவர் விடுவாரா உள்குத்து குத்த மாட்டாரா என்ற கேள்விகளுக்கு இப்போதைக்கு பதில் இல்ல.