அன்று ரஜினி பல்டி அடித்ததாக கூறிய சத்யராஜ்.. இன்று தானே பல்டி அடித்த சோகம்!
நான் பேசிய பேச்சுகள் கன்னட மக்களை மன வருத்தம் அடையச் செய்தது என்று கருதினால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சத்யராஜ் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பாகுபலி திரைப்படம் ஓட வேண்டும் என்பதற்காக இப்படி பகிரங்க மன்னிப்பு கேட்டு பல்டியடித்திருக்கிறார் சத்யராஜ். அன்று ஒகேனக்கல் பிரச்சனையில் கன்னடர்களிடம் பாடம் கற்றுக் கொண்டேன் என்று ரஜினி கூறியதை கடுமையாக கண்டித்த சத்யராஜ், இப்போது தனது படம் ஓட வேண்டும் என்பதற்காக பல்டியடித்தது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தனது பாகுபலி படம் பிரச்சினையின்றி ஓட வேண்டும் என்பதற்காக யாருக்காக குரல் கொடுத்தாரோ அந்த மக்களை இன்று கர்நாடகத்திடம் பலி கொடுத்து விட்டாரே சத்யராஜ் என்ற வருத்தம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னடர்கள் போராட்டம்
நடிகர் சத்யராஜ் உருவபொம்மையை எரித்து பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சத்யராஜுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கன்னட அமைப்புகளுக்கு எதிராக சத்யராஜ் பேசியதாக குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர்.
சத்யராஜ் மன்னிப்பு
இதனையடுத்து நடிகர் சத்யராஜ், இன்று வீடியோ வடிவிலான ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் நான் பேசிய பேச்சுகள் கன்னட மக்களை மன வருத்தம் அடையச் செய்தது என்று கருதினால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நலம் விரும்பிகளுக்கு வருத்தம் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ராஜமௌலி விளக்கம்
நான் பாகுபலி படத்தில் மிகச் சிறிய தொழிலாளி தான். என்னுடைய செயலுக்காக பாகுபலி படத்தின் விநியோகஸ்தர்களை பாதிக்காமல் இருக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இன்றைய டுவிட்டரில் ராஜ மௌலி விளக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழனாக இருப்பதில் பெருமை
இனி வரும் காலங்களில் விவசாய பிரச்சனைகள காவிரி பிரச்சனை, தமிழீழ பிரச்சனை மற்றும் தமிழக மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருவேன்.
நடிகனாக இருப்பதை விட தமிழனாக இருக்கவே விரும்புகிறேன். என்னால் பிரச்சனை வரும், தொல்லை வரும் என்று தயாரிப்பாளர்கள் நினைத்தால் என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம். ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதைவிட எந்த வித மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பது, இறப்பதுதான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி.
சத்யராஜ் நன்றி
எனது மனப்பூர்வ வருத்தத்தை ஏற்றுக் கொண்டு பாகுபலி படத்தின் 2 ஆம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழ் உணர்வாளர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் ஏற்பட்ட தொல்லைகளை பொறுத்துக் கொண்டஇயக்குனர் ராஜமௌலி உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
சத்யராஜ்க்கு ஆதரவு
சத்யராஜ் இவ்வாறு பகிரங்க வருத்தம் தெரிவித்திருப்பதை பல்டி என்று ஒரு சாரார் கூறினாலும், இனி தன்னை படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்றும் தமிழனாக இருப்பதையே பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளதால் பலரும் சத்யராஜின் கருத்துக்கு ஆதரவாகவே பதிவிட்டு வருகின்றனர்.