கடமையை செய்யாத அமைச்சர்களுக்கு பாதுகாப்பு... நேர்மையான அதிகாரிகளுக்கு மட்டும் டிரான்ஸ்பரா?
லஞ்ச, லாவண்யத்தில் சிக்கும் அமைச்சர்களை காக்கும் அதிமுக அரசு, கடமையை செய்யும் அரசு அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்வது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்.
சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதிகள் மக்கள் பணி ஆற்றாமல் லஞ்சம், முறைகேடுகளில் ஈடுபட்டபோதிலும் அவர்களை கோழி அடைகாப்பதை போல் காக்கும் அதிமுக அரசு, கடமையை செய்யும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது ஏன்? என மக்கள் கேட்கிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சட்டசபையில் சசிகலா, தினகரன் புராணம் பாட ஆரம்பித்தது முதல் அனைத்தையும் மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகர் இடைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும், திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் ஆகிய போட்டியிட்டன. இதில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த வேட்பாளர் டிடிவி தினகரன் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்...
இதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.89 கோடியை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த சென்னை அலுவலகத்துக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
அமைச்சர்கள் தலையீடு
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடந்த ஐடி சோதனைக்கு அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து பெண் அதிகாரிக்கு மிரட்டலும் விடுத்தனர். இதைத் தொடர்ந்து ஐடி அதிகாரிகள் சென்னை மாநகர கமிஷனராக இருந்த கரன் சின்ஹாவிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கரன் சின்ஹா அபிராமபுரம் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.
அமைச்சர் சரோஜா மீதான புகார்
தருமபுரியில் குழந்தைகள் நல அலுவலராக தற்காலிகமாக பணியாற்றும் ராஜமீனாட்சியை நிரந்தரம் செய்ய அவரிடம் சமூகநல்வாழ்வுத் துறை அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்டதாக பரபரப்பு புகாரை அளித்தார். அதேபோல் அமைச்சர் காமராஜ் மீது ஒப்பந்ததாரர் ஒருவர் பணமோசடி புகார் அளித்தார்.
எந்த புகாருக்கு நடவடிக்கை இல்லை
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா உள்ளிட்டோர் மீதும் ஐடி அதிகாரிகளை மிரட்டிய அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்கவில்லை.
நியாயமான அதிகாரிகள் இடமாற்றம்
சேகர் ரெட்டியின் டைரியில் இடம் பெற்றிருந்த லஞ்சம் பெற்ற அமைச்சர்களின் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் உள்துறை செயலாளர் பதவியும் வகித்து வந்த தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் ஒப்படைத்தனர். ஆனால் அதிமுக அரசோ கிரிஜாவிடம் இருந்த உள்துறை செயலாளர் பதவியை பறித்து தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் நிரஞ்சன் மார்டியிடம் வழங்கியது.
புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர்
அதேபோல் ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடத்திய ரெய்டு அடிப்படையில் நேற்று அவருக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரி துறை அதிகாரிகள் முடக்கினர். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் திருவேங்கைவாசலில் உள்ள குவாரியும் முடக்கப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவை நிறைவேற்றிய புதுக்கோட்டை மாவட்ட நிலபதிவாளர் சசிகலாவை விருது நகருக்கு இடமாற்றியுள்ளது தமிழக அரசு.
லஞ்சத்தை ஆதரிக்கிறதா...
முறைகேட்டில் சிக்கும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எங்கே தம் கூடாரம் காலியாகிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக அவற்றை முதல்வர் எடப்பாடி கண்டும் காணாமலும் இருந்து விடுகிறார் என்றும் பொதுமக்கள் கருதுகின்றனர். லஞ்ச, லாவண்யம் செய்யும் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்காமல் அமைச்சராக இருந்தாலும் அவரது சொத்துகளை முடக்கம் செய்ய உத்தரவிட்ட புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளர் சசிகலா இடம்மாற்றம் செய்யப்பட்டது அவரது நேர்மைக்கு அரசாங்கம் தந்த தண்டனையாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.