சித்தார்த் கூட குரல் கொடுத்தாச்சு.. சூப்பர் ஸ்டார் வாய் திறக்காதது ஏன்? தமிழக மக்கள் எதிர்பார்ப்பு!
சென்னை: தமிழகத்தில் மிகவும் பரபரப்பான நிலையில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை எதிர்த்து பல்வேறு நடிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தபோதிலும், நடிகர் ரஜினிகாந்த் மௌனமாக இருப்பது ஏன்? என்று கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக முயற்சித்தபோது சமூகவலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. சசிகலா முதல்வராவதற்கு நடிகர்கள் மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சசிகலா சிறை செல்ல நேரிட்டதைத் தொடர்ந்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக் கொண்டார். எனினும் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடியால் அவரது தலையீடின்றி சுதந்திரமாக ஆட்சி நடத்த முடியாது என்று பரவலாகப் பேசப்பட்டது.
இந்தச் சூழலில், மக்களாகிய நாம்தாம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நடிகர் சூர்யா வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.
அதேபோல், நடிகர்கள் மாதவன், அரவிந்தசாமி உள்ளிடோர் தற்போதைய ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், எடப்பாடிக்கு வாக்களித்த எம்எல்ஏ-க்கள் தொகுதி மக்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். சாப்பாட்டில் கூடுதலாக உப்பு போட்டு சாப்பிடும்படி தமிழக மக்களை நடிகர் சித்தார்த் கேலி செய்தார்.
ஜல்லிக்கட்டு முதல் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் கமலஹாசனோ ஒருபடி மேலே போய், எம்எல்ஏ-க்களுக்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் தனது டிவிட்டரில் கருத்து கூறியதாக தகவல்கள் வெளியானது.
கடந்த 1996-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து கூறியதில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதாக எப்போது அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இத்தனை ரண களத்துக்கு மத்தியிலும், ரஜினி மௌனம் காத்து வருவது அவரது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் தொடர்பான கருத்துகளைக் கூறும்போது வார்த்தைகளை கவனமாக கையாளும் ரஜினி, தற்போது அமைதி காப்பது அரசியல் விவகாரங்களில் இருந்து அவர் ஒதுங்கியிருப்பதைக் காட்டுகிறதா அல்லது அனைத்து சூழல்களையும் கவனத்தில் வைத்துக் கொண்டு வருங்காலத்தில் என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு வருகிறாரா என்று ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.
தற்போதைய தமிழக அரசியல் குறித்து ரஜினி கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.