கருணாநிதி உடல் நலம் பற்றிய வதந்தி திட்டமிட்டதா? பின்னணியில் திடுக் தகவல்கள்
சென்னை: கருணாநிதி உடல்நலம் குறித்து திட்டமிட்டே வதந்தி பரப்பப்படுவதாக, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளது சாதாரண வார்த்தைகள் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
கருணாநிதி உடல் நிலை குறித்த வதந்திகள் றெக்கை கெட்டி பறக்க துவங்கியது, வியாழக்கிழமையான நேற்று மாலை 6.30 மணியில் இருந்துதான். இதற்கு காரணம் கருணாநிதிக்கு சிகிச்சையளித்து வரும் காவிரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பு.
காவிரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் தொற்று இருப்பதால் காய்ச்சல் இருப்பதாகவும், அதனால் அவருக்கு லேசான, உடல் நலிவு ஏற்பட்டுள்ளதாகவும், யாரும் அவரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
பரபரப்பு ஆரம்பம்
இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களுக்குள்ளாக, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சீனியர் அமைச்சர்கள் மொத்தமாக போய் இறங்குகிறார்கள். ஸ்டாலினை சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார்கள். அப்போதுதான், பரபரப்பு இன்னும் அதிகரிக்கிறது. இதுபோதாது என்று, திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார், கம்யூனிஸ்ட் தலைவர்கள் என அடுத்தடுத்து கோபாலபுரத்தை முற்றுகையிட, தமிழகம் முழுக்க எகிறியது பல்ஸ். பலரும் நள்ளிரவை கடந்தும் செய்தி ஊடகங்களிலேயே கண்ணை வைத்து பார்த்தபடி இருந்தனர். நள்ளிரவு 12.20 மணிக்கு கோபாலபுரம் இல்ல இரும்பு கேட் பூட்டப்பட்ட பிறகுதான், படுக்கைக்கு சென்றனர் மக்கள்.
தொடர்ந்த பரபரப்பு
அந்த பரபரப்பு இன்றும் தொடர்ந்தது. காலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு படையெடுத்து சென்றனர். ஒருபக்கம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துவரும் பிரதமர் மோடி, பல மாநில முதல்வர்கள் என அனைவரும் ஸ்டாலினுக்கு போன் செய்து கருணாநிதி நலம் விசாரிக்கிறார்கள். உடல் நலம் தேற வேண்டுவதாக, ட்விட் செய்கிறார்கள். இதனால் கருணாநிதி உடல் நிலை என்பது தேசிய அளவில் கவனிக்கப்படும் விஷயமாக மாறியது.
லீக்கான படங்கள்
மற்றொருபக்கம், ராஜாஜிஹால் பகுதியில் சில பணிகள் நடந்து வருகின்றன. அங்குள்ள விளக்குகளை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது. மேலும் அரங்கத்தை சரி பார்க்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இதுதொடர்பான போட்டோக்களும் கசிந்தன. ஆனால் இந்த நேரத்தில் இதையெல்லாம் செய்வது வேண்டுமென்றே நடத்தப்படும் நாடகம் என்ற முனுமுனுப்பு திமுக வட்டாரத்தில் எழுகிறது.
வேண்டுமென்றே வதந்தி
மு.க.ஸ்டாலின் இதை ஆணித்தரமாக மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார் ஸ்டாலின். துரைமுருகன் இன்று இரவு அளித்த பேட்டியில், தேவையற்ற வதந்திகளை கிளப்பி சிலர் குழப்பம் விளைவிக்கிறார்கள் என்று நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற வதந்திகள் ஏன் கிளப்பப்படுகிறது என்று திமுக தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம்.
பின்னணி இதுதானா?
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: "திமுக கட்சி தலைவராக கருணாநிதி பதவியேற்று, 50 ஆண்டுகாலம் ஆகியுள்ளதால், கட்சி தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் கருணாநிதியை சந்திக்க வருவதை தவிர்க்கதான், காவிரி மருத்துவமனை சார்பில், அவருக்கு நோய் தொற்று இருப்பதாக அறிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால், அதையடுத்து அமைச்சர்கள் வந்து விசாரித்தது, வதந்திகளுக்கு காரணமாகிவிட்டது. இதில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். நாடே இப்போது கருணாநிதி பற்றிதான் பேசுகிறது. பெரும் புயலை கிளப்பிக்கொண்டிருந்த, தனி நபருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராணுவ விமானத்தை கொடுத்த விஷயம் மறந்துவிட்டது பார்த்தீர்களா" என கண் சிமிட்டினார்கள். ஓஹோ!