ஒ.பி.எஸ்.ஸின் சென்னை வீட்டுக்கும், உயிருக்கும் ஆபத்து.. போலீஸ் பாதுகாக்குமா?
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது தங்கியிருக்கும் வீட்டிலிருந்து அதிமுகவினரால் துரத்தப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துளளது
சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வசித்து வரும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை இல்லத்திலிருந்து அவரை அதிமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவார்களா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார். அமைச்சராக இருந்த போதும், முதல்வராக இருந்த போதும் இதே வீட்டில்தான் கடந்த பல ஆண்டுகளாக மேலாக வசித்து வருகிறார். சென்னையில் அவருக்கு வேறு வீடு இருப்பதாக தெரியவில்லை.

சசிகலாவிற்கு எதிராக கலகக்குரல் எழுப்பிய பின்னர் ஓபிஎஸ் வீடு முன்பாக தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து வந்தனர். கடந்த 10 நாட்ள் அரசியல் சலசலப்புக்குப் பின்னர் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
இந்த அமைச்சரவையில் சசிகலாவிற்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பிய ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன் இடம் பெறவில்லை. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற உடனேயே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் இருந்த காரில் சுழல் விளக்கு அகற்றப்பட்டது. அரசு லட்சினையும் அகற்றப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டது.
அவர் தற்போது அமைச்சராக இல்லை, அதனால் அமைச்சர்கள் குடியிருப்பில் அவர் வசிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் 3முறை முதல்வராக இருந்திருப்பதால் அமைச்சர்கள் குடியிருப்பில் வசிக்க எந்த தடையும் இருக்காது என்றே கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவினர் அதை அனுமதிப்பார்களா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் அவரது வீட்டைக் குறி வைநத்து இன்று நடந்த மிகப் பெரிய தாக்குதல். சசிகலா ஆதரவு அமைச்சர்கள் சுற்றிலும் இருக்க ஓ.பன்னீர் செல்வத்தால் இந்த வீட்டில் தொடர்ந்து வசிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications