கரூர் மாவட்டத்தில் தனியார் பண்ணைப் பால் விற்பனை முறைப்படுத்தப்படுமா?
கரூர்: தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தியது. ஒரு லிட்டர் ரூ.26 ஆக இருந்த எருமைப்பால் விலை ரூ.28 ஆக உயர்த்தப்பட்டது. இதே போல் ஒரு லிட்டர் ரூ.18 ஆக இருந்த பசும்பால் விலை ரூ.20 ஆக உயர்த்தப்பட்டது. பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்வு செய்யப்பட்டது. பின்னர் கடந்த ஜனவரி மாதம் முறையே கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி அறிவித்த போதும், பொதுமக்களுக்கான விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள விவசாயிகள் ஆவின் நிறுவனத்துக்கு பால் கொடுக்கின்றனர். இந்த விலை உயர்வு குறைவாக உள்ளதாக தொடர்ந்து வலியுறுத்தி வந்த விவசாயிகள், கொள்முதல் விலையை உயர்த்தித்தரக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனிடையே, தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தின. மேலும் விவசாயிகள் கொடுக்கும் பாலுக்கும் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலை கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கிய விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதைத் தொடர்ந்து பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியது.
இதன் படி, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.31ல் இருந்து ரூ.35 ஆகவும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.23ல் இருந்து ரூ.28 ஆகவும் உயர்த்தியது. இதனால் எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.4 வீதமும், பசும்பாலுக்கு ரூ.5 வீதமும் அதிகமாக கொள்முதல் விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தது. பால் உற்பத்தியாளர்களுக்கு இது மகிழ்ச்சியாக இருந்த போதும், லிட்டருக்கு ரூ.10 வீதம் ஒரே நேரத்தில் ஆவின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனிடையே, ஆவினுக்கு பால் வழங்காத சிலர் தனியாக விற்பனை செய்துவருகின்றனர். கரூர் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பால் சில்லரை விலையில் விற்கின்றனர். இதே போல் ஆங்காங்கே பண்ணைப் பால் எனக் கூறி தனியாரும் பால் விற்பனை செய்கின்றனர்.
ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து தனியாக பால் விற்பனை செய்வோரும் விலையை உயர்த்திவிட்டனர். எருமைப்பால் லிட்டர் ரூ.46, பசும்பால் ரூ.40க்கு இவர்கள் விற்கின்றனர். லிட்டருக்கு ரூ.10 அதிகமாக்கிவிட்டனர். இதனால் பொதுமக்கள் மேலும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தனியாக பண்ணைப்பால் என்ற பெயரில் விற்பனை செய்துவரும் தனியாரும் ஆவின் பால் உயர்வுக்குப் பின்னர் மீண்டும் பால் விலையை உயர்த்தியுள்ளனர். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
எனவே, கரூர் மாவட்டத்தில் தனியார் பண்ணைப் பால் விற்பனையை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் கலப்படம்
இதுகுறித்து நுகர்வோர் அமைப்பினர் கூறுகையில், பொதுமக்கள் வாங்கும் பாலுக்கு 2011ம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.8 உயர்ந்தது. பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள விவசாயிகள் ஆவின் நிறுவனத்துக்கு பாலை விற்பனை செய்கின்றனர். ஆவின் நிறுவனம் பாலை கொள்முதல் செய்து குளிரூட்டும் முறையில் பதப்படுத்தி திருச்சி ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பி வருகிறது.
கரூர் அருகே உள்ள சுக்காலியூரில் பால்குளிரூட்டும் நிலையம் செயல்படுகிறது. மேலும் தரகம்பட்டி, தாளியாபட்டியில் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு கொள்முதல் செய்யப்படும் பால் திருச்சி ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆவினில் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் தவிர தனியாக சிலர் விற்பனை செய்கின்றனர். போதுமான விலை கிடைக்காத நிலையில் தனியாக ஆங்காங்கே பண்ணைப் பால் எனக்கூறிக்கொண்டு பால் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர். எருமைப்பால் லிட்டருக்கு ரூ.46, பசும்பால் லிட்டருக்கு ரூ.40 வீதம் விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு பால் விற்பனை செய்வோரை அரசு முறைப்படுத்தி ஆவின் நிறுவனத்துக்கு கொள்முதல் செய்ய வேண்டும். அல்லது ஒருங்கிணைந்து விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பாலில் தண்ணீர் கலப்பது போன்ற புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
பொதுமக்களின் சுகாதாரம் கருதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு ஆவின் பால் விற்பனையையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றனர். கரூர் மாவட்டத்தில் தனியார் பண்ணைப் பால் விற்பனையை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.