சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கு போகிறார் ஜெ?.. அப்போ தீபாவளி?? கவலையில் அதிமுகவினர்!!
சென்னை: சிங்கப்பூரில் இருந்து வந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும் ஜெயலலிதா சிங்கப்பூர் சென்றால் மட்டுமே பூரண நலமடைய முடியும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடலில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இருந்தாலும், ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அவர் விரைவில் சிங்கப்பூருக்கு பயணமாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி அப்பல்லோவிற்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசும் புகைப்படங்களை வெளியிட்ட பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கையாக அவர் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படுவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிகிச்சையில் ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 26 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து பல்வேறு சிகிச்சைகளுக்கான மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருகிறது. லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் கில்நானி, அஞ்சன் திரிகா, நிதிஷ் நாயக் ஆகியோர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஊட்டச்சத்து, பிசியோதெரபி சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்படு கின்றன.

சிங்கப்பூர் நிபுணர்கள்
லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த 2 பெண் மருத்துவ நிபுணர்கள் நேற்று முன்தினம் அப்போலோவுக்கு வந்து முதல்வருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளித்தனர். அவர்கள் நேற்று 2வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.
முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 26 நாட்களாக முதல்வரின் எந்த போட்டோவும் வெளியாகவில்லை.

ஜெயலலிதா போட்டோ
பிரதமர் மோடி சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சந்திப்பின் போது புகைப்படங்களை எடுத்து வெளியிடலாம் என்று போயஸ் தோட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான் கடந்த ஒரு வாரமாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவரது மருத்துவ அறிக்கையை வெளியிடவில்லை என அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர்
இது ஒருபுறம் இருக்க சிங்கப்பூரில் இருக்கும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை கொண்டு சென்றால் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது என்று அப்பல்லோ நிர்வாகத்தினர் பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் கூறியதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனைக்கு முதல்வரை மாற்றினால் அதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தமிழக அரசு தரப்பினரிடம் கூறியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் விமானத்தில் ஜெ.,
இதற்கு தமிழக அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லையாம். அப்படி பதில் அளிக்கும் பட்சத்தில் முதல்வரை உடனடியாக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் மூலமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு அம்மா
பிரதமர் மோடி சென்னை வந்து அப்பல்லோவில் நடப்பவற்றை நேரடியாக அறிந்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் அம்மா முகத்தை தீபாவளிக்காவது பார்க்க முடியுமா என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் அதிமுக தொண்டர்கள். அப்பல்லோ வாசலில் பிரார்த்தனைகளும், கோவில்களில் குடம் குடமாய் பாலபிஷேகமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications