தமிழகத்திற்கு எதிரான கர்நாடகா சதி: சதானந்த கவுடா மீது மோடி நடவடிக்கை எடுப்பாரா? - வைகோ
தஞ்சாவூர்: காவிரியில் புதிய அணை கட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சதானந்த கவுடா மீது நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்காதது ஏன் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூர் ஜெயராம் மஹாலில் நடைபெற்றது. வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.கழகத்தை சேர்ந்த திரு. T.K.S. இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு. கிருஷ்ணசாமி வாண்டையார், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முன்னாள் M.L.A. திரு. ஞானசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அதன் நிறுவனர் திரு. வேல்முருகன், தமிழ்நாடு வணிகர் பேரவை சார்பில் திரு. த. வெள்ளையன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் திரு. தமீம் அன்சாரி, திராவிட விடுதலை கழகத் தலைவர் திரு. கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த திரு. கோவை ராமகிருஷ்ணன், முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் திரு. கம்பம் அப்பாஸ், மே 17 இயக்கம் திரு. திருமுருகன் காந்தி, பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன் பேசும்போது ‘‘மத்திய அரசுக்கு எதிராக போராட் டம் நடத்தினால் மட்டும் போதாது. காவிரி பிரச்னையில் மெத்தனமாக இருக்கும் தமிழக அரசுக்கு எதிராக வும் போராட்டங்கள் நடத்த வேண்டும்.'' என்றார்.
புதிய அணைகள்
இதில் உரையாற்றிய வைகோ, ‘‘காவிரியில் கர்நாடகம் புதிய அணைகள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மத்திய அரசு அனுமதி தர முடியாது என்பது எங்களுக்கும் தெரியும். அதற்காக நாம் அலட்சியமாக இருந்து விடக்கூடாது.
டெண்டர் விடுவதா?
மத்திய அரசின் அனுமதி இல்லாததால் கர்நாடகம் புதிய அணைகளை கட்டாது என்று சொன்னால், ஏன் இதற்காக அவர்கள் டெண்டர் விட வேண்டும். கட்டுமான பொருட்களை ஏன் அங்கு குவித்து வைக்க வேண்டும். அணைகளை கட்டினால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நாம் சும்மா இருந்துவிட முடியாது.
அணைகளை தகர்க்கலாமா?
நாஜேந்திர சோழனை போல் படையெடுத்து சென்று அணைகளை நம்மால் தகர்க்க முடியுமா. அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இன்றைய சூழல் வேறு.
மத்திய அமைச்சர்
தமிழ்நாட்டிற்கு எதிராக கர்நாடாகாவில் நடைப்பெற்ற சதி ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கலந்து கொண்டார். இது நியாயமா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், " பிரதமர் நரேந்திரமோடியின் அனுமதி பெறாமலா அதில் அவர் கலந்து கொண்டிருப்பார்.
நடவடிக்கை இல்லையே
ஒருவேளை நரேந்திரமோடியின் அனுமதி பெறாமலே சதானந்த கவுடா கலந்து கொண்டார் என்று சொன்னாலும் கூட, விஷயம் தெரிந்த பிறகாவாது சதானந்தா கவுடா மீது நரேந்திரமோடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
போராட்டத்தால் என்ன பயன்
காவிரி பிரச்னைக்காக, டெல்டா மாவட்டங்களில் இரண்டு முறை கடையடைப்பு போராட்டங்களும் வேலைநிறுத்தமும் நடைபெற்றது. இதனால் எந்த பலனும் இல்லை. இதற்காக கர்நாடகம் கவலைப்படாது.
பாதிப்பு நமக்குத்தான்
கடையடைப்பு நடத்துவதால் நம்முடைய வியாபாரிகள் தான் பாதிக்கப்படுவார்கள். இங்கு பேருந்துகள், ரயில்கள் ஓடாமல் இருந்தால் நம்முடைய மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசைதான் நாம் நிர்பந்திக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள் முன்புதான் நாம் போராட்டம் நடத்த வேண்டும் என்றார் வைகோ.