நாட்டையே திரும்பி பார்க்க வைத்த 'செங்கடல்' பேரணி... தமிழத்திலும் வருமா இந்த எழுச்சி!
மஹாராஷ்டிராவில் விவசாயிகள் நடத்திய பேரணி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது, இது போன்றதொரு எழுச்சி பேரணியை தமிழக விவசாயிகள் முன்எடுப்பார்களா?
சென்னை : விவசாயக்கடன் தள்ளுபடி, சேதமுற்ற பயிர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பையை நோக்கி விவசாயிகள் நடத்திய செங்கடல் பேரணி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இதே போன்று தமிழக விவசாயிகளும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒற்றுமையுடன் பச்சைக்கொடி பேரணி நடத்துவார்களா?
விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு விவசாய பொருட்களுக்கு உற்பத்தி செலவோரு 50 சதவீத கூடுதல் விலை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக விவசாயிகளில் ஒரு பிரிவினர் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் கடும் மழையிலும் போராட்டம், மண்டை ஓட்டுடன் போராட்டம் என பல கட்ட போராட்ங்களை விவசாயிகள் நடத்தினர். ஆனால் மத்திய அரசு தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவே இல்லை என்பதோடு, விவசாயிகளை சந்திக்கவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்தில் இருந்து டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி உறுதியளித்ததன் பேரில் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
ஓஎன்ஜிசியால் மாசாகும் நிலத்தடி நீர்
ஆனால் இது நாள் வரை விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறிய பாடில்லை. தமிழகத்தில் விவசாயத்தை பாதிக்கும் பல திட்டங்களை காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசு செய்து வருகிறது. ஒரு பக்கம் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறுகளை அமைத்து மீத்தேன் எடுத்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, விவசாயம் பாதிக்கப்படுகிறது. அதோடு அவ்வப்போது எண்ணெய் குழாய்களில் திடீர் திடீரென ஏற்படும் கசிவுகள் தீ விபத்துகளுக்கு வித்திடுவதால் விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
போராடும் கதிராமங்கலம் மக்கள்
கதிராமங்கலத்தில் கூடுதலாக 100 எண்ணெய் கிணறுகளை அமைக்கும் ஓஎன்ஜிசியின் முயற்சியை கண்டித்து இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள், பள்ளி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் இதில் பாதிப்பில்லை என்றும் ஓஎன்ஜிசி பணிகளை தடுப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓஎன்ஜிசி மிரட்டி வருகிறது.
அச்சுறுத்தும் கெயில் திட்டம்
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து இந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் மக்களை சமாதானப்படுத்தி திட்டத்தை தொடரும் முனைப்பில் மத்திய அரசு இருக்கிறது.
இதே போன்று கெயில் திட்டம் கைவிடப்படவில்லை, எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவை அமைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் நீரின்றி ஏற்கனவே விவசாயமானது சுருங்கிவிட்டது.
காவிரிக்காக காத்திருக்கும் விவசாயிகள்
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி 14 டிஎஎம்சி தண்ணீர் குறைந்துள்ளதால் மேலும் விவசாயமானது 1 லட்சம் ஹெக்டேருக்கு பாதிக்கும் நிலை நிலவுகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை ஸ்கீம் தான் என்று மத்திய அரசு கண்ணாமூச்சி ஆடி வருகிறது. கடன் தள்ளுபடி முதல் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை வரை என பல நெருக்கடிகளில் விவசாயிகள் உள்ளனர். எனவே தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றுமையுடன் பச்சைக்கொடி கட்டி போராட்ட களத்தில் இறங்கி எழுச்சியாக போராடினால் நமக்கும் வெற்றி கிட்டும்.
ஒற்றுமையான பேரணி
அரசியல் பின்னணி இல்லாமல் தமிழகத்தில் இருந்து தொடங்கும் எழுச்சி பேரணி நிச்சயம் டெல்லி கோட்டையை அதிர வைக்கும். விவசாயிகள் மத்தியில் இல்லாத ஒற்றுமையே நம்முடைய கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லையோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.