சட்டசபைக்கு தனித்து வருவாரா விஜயகாந்த்? எதிர்கட்சியினர் எதிர்பார்ப்பு
சென்னை: தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான விஜயகாந்த் சட்டசபைக்கு தனித்து வருவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை தேமுதிக பெற்றது. பின்னர், அதிமுகவுடன் ஏற்பட்ட மோதல், கசப்புணர்வை அடுத்து கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.
அந்த நாள் ஞாபகம்
கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடர் காரசாரமாக அமைந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் தொடங்கிய பிரச்சினையில்தான் விஜயகாந்துக்கு சிக்கல் ஏற்பட்டது.
திராணியை நிரூபிப்போம்
சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தனித்து நின்று திராணியை நிரூபிப்போம் என்று சவால் விட்டார் ஜெயலலிதா, அதற்கு பதிலளித்த விஜயகாந்த், ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் இடைத்தேர்தலில் ஜெயிப்பது பெரியவிசயமில்லை. எதிர்கட்சியாக இருந்த போது நீங்களும் இடைத்தேர்தலில் தோற்று டெபாசிட் இழந்தவர்கள்தானே என்று கேட்டார்.
அமைச்சர்கள் கூச்சல்
இதனையடுத்து அமைச்சர்கள் எழுந்து தேமுதிகவினரை அமரச்சொன்னார்கள். வருவாய்துறை அமைச்சர் பேசும் போது, எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த், தன்னைப் பற்றி விமர்சித்த அமைச்சகளை பார்த்து நாக்கை துருத்தி பேசினார். உடனே அமைச்சர்கள் இது சினிமா இல்லை, இது சினிமா இல்லை என்று கூச்சலிட்டனர். இந்த கூச்சல், குழப்பத்திற்கு இடையே விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிகவினரை கூண்டோடு வெளியேற்றினார் அப்போதைய சபாநாயகர் ஜெயக்குமார்.
விஜயகாந்த் புறக்கணிப்பு
சட்டசபையில் கையை நீட்டி, நாக்கை துருத்தி பேசியதாக 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் காலம் முடிந்ததும் அவர் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டசபைக்குள் நுழையாமல்
சட்டசபை கூடும் நேரத்தில் ஒரு நாள் மட்டும் வந்து சட்டசபை வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு வந்தார்.
எதிர்கட்சித்தலைவரின் கடமை
தமிழக சட்டமன்றத்தில் பிரதான கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு புதிய கட்சியான தே.மு.தி.க. எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதும், ஆக்கப்பூர்வமான யோசனைகளை எடுத்து சொல்வதும் தான் எதிர்கட்சிகளின் தலையாய கடமை. அந்த கடமை இந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டதா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
வெளிநடப்பு, வெளியேற்றம்
ஒவ்வொரு முறையும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் போதெல்லாம் நாளிதழ்களில் ஒரு செய்தி தவறாமல் இடம் பெறும் சட்டசபையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு! வெளியேற்றம்! கூண்டோடு வெளியேற்றம் என்ற செய்திதான் அது.
தேமுதிகவினர் சஸ்பென்ட்
இந்த கூட்டத் தொடரிலும் வியாழக்கிழமையன்று ஆளுங்கட்சியின் விமர்சனத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ஜெயலலிதா பற்றி கூறிய கருத்துக்கு கடும் ஆட்சேபனை எழுந்தது. இதையடுத்து 19 எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தொடர் முடியும் வரை விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
விஜயகாந்த் வருவாரா?
தற்போது எஞ்சி இருப்பது விஜயகாந்த் மட்டும்தான். தனி ஆளாக விஜயகாந்த் மீண்டும் சட்டசபைக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது. விஜயகாந்த் சட்டசபைக்கு வரவேண்டும் என்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஜயதாரணி (காங். எம்.எல்.ஏ)
எதிர்கட்சி தலைவர் பதவி என்பது ஆளுங்கட்சியை கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பது. அந்த பதவியை துணிச்சலுடன் எதிர் கொள்ள வேண்டும். ஆளுங்கட்சியையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கும் உரிமை எதிர்கட்சிகளுக்கு உண்டு. அதை தாங்கும் நிலையில் ஆளும்கட்சி இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதிர் கட்சிகளுக்கு உரிய மரியாதை அவையில் இல்லை என்பது வேதனையான விசயம். விஜயகாந்த் சட்டசபைக்கு தனது கடமையாற்ற வரவேண்டும். எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
யாருமே இல்லையா?
தமிழக சட்டசபையில் எதிர்த்து குரல் கொடுக்க யாருமே இல்லை என்ற துர்பாக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார். ஆளுங்கட்சியினர் எதுவேண்டுமானாலும் பேசலாம். எதிர்கட்சிகள் நியாயத்தை கூட பேச கூடாது என்று நினைப்பது தவறான போக்கு என்றும் கூறியுள்ளார்.
அம்மாவை புகழ்வது போதுமா?
சட்ட சபை ஒன்றிரண்டு நாட்கள் தான் நடக்கிறது. பேச வேண்டிய மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ உள்ளது. அதையெல்லாம் விட்டுவிட்டு அம்மாவை புகழ்ந்தால் மட்டும் போதும். மக்கள் பிரச்சினையை பற்றி கவலை இல்லை என்று கருதுவது மோசமான மனோபாவம் என்று கூறினார்.
ஜனநாயகப் படுகொலை
சட்டசபைக்கு எல்லோரும் வருவதற்கான ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக வேண்டும். நேற்று தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடந்திருப்பது ஒரு ஜனநாயக படுகொலை. இதை எதிர்த்து எல்லோரும் போராட வேண்டும். விஜயகாந்தும் போராட வேண்டும் என்பது தான் எல்லோரது விருப்பமும்.
அவர் வருவாரா?
சட்டசபை எதிர்கட்சித்தலைவராக இருக்கும் விஜயகாந்த் கடந்த 2 ஆண்டுகாலமாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் அரசுக்கு எதிராக அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு சில போராட்டங்களில் மட்டும் பங்கேற்கிறார். தன்னுடைய கட்சி எம்.எல்.ஏக்கள் யாருமின்றி திங்கட்கிழமையன்று தனித்து சட்டசபைக்கு செல்வாரா என்பது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.