ஒருத்தரும் என்னை வந்து பார்க்கிறதே இல்லை.. பாஜக தலைவர்களிடம் எகிறிய விஜயகாந்த்
சென்னை: பாஜக மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவரான, தமிழக பாஜக கூட்டணியின் தலைவரான என்னை ஒருமுறை கூட வந்து பார்த்ததில்லை. ஜெயலலிதாவைப் பார்க்கிறார்கள். ஆனால் என்னைப் பார்ப்பதே இல்லை என்று தமிழக பாஜக தலைவர்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காட்டமாக கேட்டுள்ளாராம்.
சட்டசபைத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி போடலாம், என்ன செய்தால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற கோணத்தில் பல மாதங்களாகவே கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளும் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளன.
அதிமுகவைப் பொறுத்தவரை சில பல குட்டிக் கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு, தனியாகவே போட்டியிடும் என்று தெரிகிறது. திமுகதான் தவிப்பில் உள்ளது. வலுவான கூட்டணி அமைக்க என்ன வழி என்று அது தீவிரமாக முயற்சித்து வருகிறது. விஜயகாந்த்தை அது குறி வைத்துள்ளது.
வாக்குகளைப் பிரிக்கப் போகும் வைகோ
மறுபக்கம் வாக்குகளைப் பிரிக்கும் வகையில் வைகோ தலைமையில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த அணியைப் பார்த்து அதிமுக கவலைப்படவில்லை. காரணம், இது தனக்கு சாதகமானதே என்பதால். ஆனால் திமுகவின் டென்ஷனாக காணப்படுகிறது.
டென்ஷனில் உலவும் திமுக
இந்த டென்ஷன் கூடக் கூட மதிமுகவிலிருந்து வரிசையாக பலரும் வெளியேறி திமுகவுக்குப் போய்க் கொண்டுள்ளனர். இப்படியெல்லாம் ஒரு கட்சியிலிருந்து விலகி இன்னொரு கட்சியில் சேருவது தவறில்லை என்று திமுக தலைவர் கருணாநிதியும் கூறியுள்ளார்.
அதிர்ச்சியில் மூழ்கும் பாஜக
இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியை சமீபத்தில் பாராட்டிப் பேசினார் விஜயகாந்த். இதனால் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஆச்சரியமடைந்ததை விட அதிகமாக அதிர்ந்து போனது திமுகவும், பாஜகவும்தான்.
உள்ளதும் போய்ருமே!
விஜயகாந்த மட்டும் மக்கள் நலக் கூட்டணி பக்கம் போய் விட்டால் பெரும் கஷ்டமாகி விடும் என்று திமுக பயப்படுகிறது. பாஜகவோ, உள்ளதும் போச்சுடா என்ற கதையாகி விடுமே என்ற கவலையில் உள்ளது.
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்
இந்த நிலையில், எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் உள்ள பாஜக, தன்னிடமிருந்து விலகியே நிற்கும் விஜயகாந்த்தை மீண்டும் தன் பக்கம் இழுக்க தீவிரமாக களம் இறங்கியுள்ளது. ஆனால் என்னை சற்றும் மதிக்காத உங்களுடன் எப்படி சேர முடியும் என்று காட்டமாக
கேட்டுள்ளாராம் விஜயகாந்த்.
விஜயகாந்த்துடன் சந்திப்பு
இதையடுத்து நேற்று திடீரென பாஜக தலைவர்கள் தமிழசை செளந்தரராஜன், மோகன்ராஜுலு ஆகியோர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் விஜயகாந்த்தைச் சந்தித்துப் பேசினர்.
காக்க வைத்த "கேப்டன்"
இவர்கள் தேமுதிகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். ஆனால் இவர்களைப் பார்க்கவே பிடிக்கவில்லையாம். இதனால் வந்த தலைவர்களை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காக்க வைத்த பின்னர்தான் வந்து பார்த்தாராம் விஜயகாந்த்.
முடிவெடுக்கலையே
பாஜக தலைவர்களிடம் நான் கூட்டணி குறித்து இன்னும் முடிவே எடுக்கவில்லை என்று எடுத்த எடுப்பிலேயே கூறினாராம் விஜயகாந்த். பாஜக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கூட அவர் ஏற்கவில்லையாம். எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறிய விஜயகாந்த் கூடவே தனது குமுறலையும் வெளியிட்டாராம்.
ஒருத்தரும் வந்து பார்ப்பதே இல்லை
மத்திய அமைச்சர்கள் பலர் சென்னைக்கு வருகிறார்கள். ஜெயலலிதாவைச் சந்திக்கவும் செய்கிறார்கள். ஆனால் நான் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர். தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர். ஆனால் என்னை மரியாதைக்குக் கூட யாரும் வந்து பார்ப்பதில்லை. இப்படி இருக்கும் நிலையில் எப்படி நான் கூட்டணியில் நீடிக்க முடியும் என்று விஜயகாந்த் வெடுக்கென்று கேட்டதாக சொல்கிறார்கள்.
பிரேமலதாவுடன் பேசிய தமிழிசை
இதற்கிடையே விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்தை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனியாக நேற்று முன்தினம் போய் பார்த்து மனம் விட்டுப் பேசியதாக தெரிகிறது. அப்போது விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது, எத்தனை சீட் ஒதுக்குவது என்பது குறித்தெல்லாம் பேசியதாக சொல்கிறார்கள்.
"கேப்டன்" எந்தப் பக்கம் தனது கூட்டணிக் கப்பலைத் திருப்பப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.