மவுலிவாக்கம் கட்டட விபத்து- முன்ஜாமீன் கோரும் பெண் ஆர்க்கிடெக்ட்
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விவகாரத்தில் பெண் ஆர்க்கிடெக்ட் ஒருவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
27 வயதான சுகன்யா பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், திருஸ்டிகோன் கட்டிடக்கலை நிறுவனத்தில் கட்டிடக்கலை நிபுணராக பணியாற்றி வருகிறேன். மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னையும் போலீசார் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இந்த கட்டிடத்தை வடிவமைத்து திட்டம் உருவாக்கிய குழுவில் நானும் இடம் பெற்று இருந்தேன். இதில், என்னுடைய பங்கு மிகவும் குறைவானது. கட்டிடத்தில் அஸ்திவாரத்தின் ஆழம், உறுதித்தன்மை உள்ளிட்ட பணிகளை கட்டிடத்தை கட்டும் என்ஜினீயர்கள்தான் மேற்கொள்ளவேண்டும். இந்த பணிக்கும், கட்டிடக்கலை நிபுணர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கட்டிடம் இடிந்த சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவும் இல்லை. நான் ஒரு அப்பாவி. ஆனால், இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்ய தேடிவருகின்றனர். எனவே எனக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.