டி.எஸ்.பி விஷ்ணு பிரியா சாவில் மர்மம்… சி.பி.ஐ விசாரணை கேட்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்
சென்னை: பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து சி.பி.ஐ. வி்சாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி விஜயதாரணி தெரிவித்துள்ளார். இதேபோல விஷ்ணு பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், டி.எஸ்.பி., மரணம் குறித்து தமிழக அரசு அறிவித்து உள்ள சி.பி.சி.ஐ.டி விசாரணை நேர்மையாக நடைபெறாது. அவரது மரணத்தி்ல் அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்கு சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றார்.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் A. ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் 27 வயது நிரம்பிய விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்ட குழு அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைகிறது.
அவர் கடந்த 18ம் தேதி காலை போக்குவரத்துக் காவலர் ஒருவர் ஆசிரியரை தாக்கியதால் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் செய்த ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றவர் பத்து பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறபடுகிறது. இச்சுழலில் அவர் எழுத்திய கடிதத்தில் காவல் துறை பணி எனபது தெய்வத்திற்கு சமம் எனவும், தற்கொலைக்கும் கோகுல்ராஜ் மரணம் குறித்த விசாரணைக்கும் தொடர்பில்லை என எழுதியதுடன் எனது சாவை அரசியல் ஆக்க வேண்டாம் எனவும், எழுதி உள்ளதாக சொல்லபடுகிறது.
இந்த மூன்று விபரங்களையும் குறிப்பிட்டு எழுத வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டுள்ளது? அவரை பணி செய்ய விடாமல் தடுத்து உள்ளவர்கள் யார் ? அவரை தற்கொலை செய்ய துண்டியவர்கள் யார்? மிரட்டியவர்கள் யார்? என்பதை கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. அவர் ஏற்கனவே காவல் பணிக்கு நேரடியாக தேர்வு பெற்று வந்ததாலும் சிறு வயது பெண் என்பதாலும் அவரை ஆண் அதிகாரிகளும் தனக்கு கீழ் இருந்த அதிகாரிகளும் மதிப்பதில்லை என்ற தகவலும் உள்ளது .
கோகுல்ராஜ் படுகொலை சம்பவத்தின் விசாரணை அதிகாரியான இவர் சாவில் மர்மம் இருபதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. எனவே இச்சம்பவம் குறித்து வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும் A. ரங்கசாமி கேட்டு கொண்டுள்ளார்.