குன்றத்தூரில் 4 வயது சிறுமி வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொலை - பெண் கைது
குன்றத்தூரில் வாளி தண்ணீரில் மூழ்கடித்து 4 வயது சிறுமியை கொலை செய்த பெண் ஆயிஷாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை : சென்னை அடுத்த குன்றத்தூரில் 4 வயது சிறுமி கோசிகா கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது ஆயிஷா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் கோசிகாவின் தந்தை சரவணணின் பெண் தோழி என்பது தெரிய வந்துள்ளது.
குன்றத்தூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன் ,32, வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இவருக்கும், குன்றத்தூர் அடுத்த மூன்றாம்கட்டளை பகுதியை சேர்ந்த ஜெயந்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது குழந்தை கோசிகா,4. கோவூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாள்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சரவணன் -ஜெயந்தி தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தை கோசிகா தாய் ஜெயந்தியின் பராமரிப்பில் மூன்றாம்கட்டளையில் இருந்து வந்தார்.
இதனால் தனது குழந்தையை பார்க்க முடியாமல் தவித்து வந்தார் சரவணன், பெரியவர்கள் மூலம் பஞ்சாயத்து பேசிய பின்னர் குழந்தை கோசிகா வாரத்தில் இரண்டு நாட்கள் தன்னிடம் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அவரின் கோரிக்கையை ஜெயந்தியும் ஏற்றுக்கொண்டார். அதன்படி, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை குழந்தை கோசிகா தந்தை சரவணன் வீட்டிற்கு செல்வதும், மீண்டும் திங்கட்கிழமை தாய் ஜெயந்தி வீட்டிற்கு வருவதுமாக இருந்தார்.
வழக்கம் போல கடந்த வெள்ளிக்கிழமையன்று சரவணனிடம் குழந்தையை அனுப்பி வைத்த ஜெயந்தி, வேலூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று சரவணனிடம் இருந்து ஜெயந்திக்கு போன் வந்துள்ளது. அப்போது, குழந்தை விளையாடியபோது திடீரென மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாகவும், அதனால் மயக்கம் அடைந்த குழந்தையை சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் போரூருக்கு வந்த ஜெயந்தி மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். உடனே குழந்தையை கட்டிப்பிடித்து கதறி அழுத ஜெயந்தி, குழந்தையின் முகத்தில் ஆழமான காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி கதறி அழுதார். குழந்தை கோசிகாவின் தாய் குன்றத்தூர் போலீசில் அளித்த புகாரில், எனது குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளது. என் மீது உள்ள கோபத்தில் கணவர் சரவணனே குழந்தையை கொலை செய்து விட்டதாக கூறினார்.
அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார்கள். எங்கே தனது சந்தோசத்திற்கு குழந்தை இடைஞ்சலாக இருக்குமோ என்று நினைத்து குழந்தையை அவர் கொலை செய்துவிட்டார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சிறுமி கோசிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.
இதனிடையே வாளி தண்ணீரில் மூழ்கடித்து 4 வயது சிறுமி கோசிகா கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குழந்தை கோசிகாவை கொலை செய்த சரவணனின் பெண் தோழி ஆயிஷா கைது செய்யப்பட்டுள்ளார்.