தீர்ப்பு வழங்க லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி சஸ்பெண்ட்
சென்னை: ஊழல் முறைகேடு புகார் காரணமாக பதவி உயர்வு பெறும் நாளில் திருவொற்றியூர் பெண் மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுக்கு ஆளான பெண் நீதிபதியின் பெயர் ஜெயசூர்யா என்பதாகும். இவர் சென்னை திருவொற்றியூர், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட்டாக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவர் மீது நடுவர் நீதிமன்றப் பதிவேடுகளில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் மாவட்ட நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி ஆகியோரிடம் ஏராளமானோர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி பவதாரணி ஆகியோர் திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாஜிஸ்திரேட்டு ஜெயசூர்யா மீது பல்வேறு முறைகேடுகளுக்கான முகாந்திரம் இருப்பதை தெரிந்து கொண்டனர்.
வழக்கு நடவடிக்கையில் முறைகேடு செய்தல், தண்டனை பெற்றவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத்தை முறையாக கருவூலத்தில் கட்டாதது உள்ளிட்டவற்றை கண்டு பிடித்தனர். நீதிமன்ற பதிவேடுகளையும் சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு ஜெயசூர்யாவை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து இரு நீதிபதிகளும் உத்தரவிட்டனர்.
திருவொற்றியூர் நீதிமன்ற பொறுப்பு தற்காலிகமாக பூந்தமல்லி மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயசூர்யா பதவி உயர்வு பெற இருந்த நாளில் ஊழல் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications