மதுரை பெண் இன்ஜினியர் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு 12 ஆண்டு சிறை
மதுரையைச் சேர்ந்த பெண் பொறியாளர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: மதுரையைச் சேர்ந்த பெண் பொறியாளர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரை தெப்பக்குளம் காவல் ஆய்வாளராக சேதுமணி மாதவன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார்.
அப்போது அகிலாண்டேஸ்வரி என்ற மென்பொருள் பொறியாளர் ரூ. 2 லட்சம் பண மோசடி செய்ததாக பாலு என்பவர் போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அகிலேண்டேஸ்வரியை விசாரணைக்கு அழைத்து சென்ற சேதுமணி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக சேதுமணி வழக்கு பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அகிலாண்டேஸ்வரியின் தாய் புகாரை ஏற்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர். வழக்கை விசாரித்த தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் இன்ஸ்பெக்டர் சேதுமணிக்கு12 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.