சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.... திமுக பொதுச்செயலர் அன்பழகன் திட்டவட்டம்
திருச்சி: தமிழக சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர் க. அன்பழகன். அவருக்கு வயது 94. திமுக தலைவர் கருணாநிதியை விட ஒரு வயது மூத்தவர்.
இந்த வயதிலும் திமுக பொதுக்கூட்டங்களில் அவ்வப்போது கலந்து கொண்டு திராவிடர் இயக்க வரலாற்றை மணிக்கணக்கில் வழக்கம்போல பாடம் எடுக்கும் பாணியிலேயே பேசுகிறார் அன்பழகன். அண்மையில்கூட திருச்சியில் நடைபெற்ற திமுக எம்பியும் அக்கட்சி கொள்கை பரப்பு செயலருமான திருச்சி சிவாவின் புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் அன்பழகன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், வரும் சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1922ஆம் ஆண்டு பிறந்த அன்பழகன் 40 வயதில் 1962ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்குள் நுழைந்தார். பின்னர் லோக்சபா எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1977ஆம் ஆண்டு முதல் திமுகவின் பொதுச்செயலராக இருந்து வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த காலங்களில் நிதி அமைச்சராக பதவி வகித்தவர் அன்பழகன். கடந்த 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட அன்பழகன் 409 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றார்.
கடந்த 2011ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் நம்பர் 2-வான அன்பழகன் தோல்வி அடைந்தார். இது அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்தும் முதுமை காரணமாகவும் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ளார் அன்பழகன்.