ஜெ. உடல் நிலையில் முன்னேற்றம்.. இப்போதெல்லாம் இந்த வார்த்தையை அப்பல்லோ தவிர்க்க காரணம் என்ன?
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர் சத்து இழப்பு என காரணம் கூறப்பட்டது. அப்பல்லோ வெளியிட்ட முதல் அறிக்கையில் இந்த தகவல்தான் கூறப்பட்டது.
அதேநேரம், ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் (Continues to improve) இருப்பதாகவும் அறிக்கைகளில் தவறாது வாசகம் இடம் பெற்று வந்தது. ஆனால் ஒரு சில அறிக்கைகளுக்கு பிறகு, ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் ஒரு சில நாட்களில் டிச்சார்ஜ் செய்யப்படுவார் என கூறிவந்த அப்பல்லோ, பின்னர், ஜெயலலிதா நீண்ட நாள் மருத்துவமனையில் தங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டது.
அந்த வார்த்தை மிஸ்சிங்
இந்நிலையில்தான் கடந்த ஒரு சில அறிக்கைகளில் "முதல்வர் உடல் நிலையில் முன்னேற்றம்" என்ற வார்த்தை அப்பல்லோ அறிக்கைகளில் மிஸ்சிங்.
பன்னீர் செல்வத்திற்கு பொறுப்பு
இந்த வார்த்தைகள் இப்போது தவிர்க்கப்படுவதற்கான காரணம் குறித்து, அதிமுக வட்டாரங்களிடம் கேட்டோம். அவர்கள் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று படிப்படியாக குறைந்துவருவதால், அவர் நீண்ட காலம் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது. எனவே அவரது பொறுப்புகள் பன்னீர் செல்வத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
முரணாக கூடாது
பன்னீர் செல்வத்திற்கு பொறுப்புகளை மாற்றும் முன்பிருந்து ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் என்ற வார்த்தைகள் விடுபட ஆரம்பித்துள்ளன. ஏனெனில், உடல் நிலையை காரணம் காட்டி பொறுப்புகள் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்படும் நிலையிலும், முதல்வர் உடல்நலம் வேகமாக முன்னேறி வருவதாக கூறினால், அது முரணாக தெரியும் என்பதால் இந்த ஏற்பாடு என்று கூறினர்.
மருத்துவர் குழு
முதல்வர் ஜெயலலிதாவை லண்டன் டாக்டர் ரிச்சர்ட், எயம்ஸ் மருத்துவ குழுவை சேர்ந்த டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து உரிய மருந்துகளை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.