”நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்” புவியை பாதுகாக்காவிட்டால்- உலக பூமி தினம் இன்று
சென்னை: நாம் வாழும் "பூமித்தாய்" நம்மை தாங்கிப் பிடிக்காவிட்டால் இந்த தேர்தல், ஓட்டு, ஊழல் என்று எதுவுமே இருந்திருக்காது.
ஆனால், நாம்தான் நல்லது செய்வோரை உடனே மறந்து விடுவோமே!அப்படித்தான் பூமியையும் நாம் மறந்தே போனோம்.
அதனை நினைவில் நிறுத்தத்தான் இன்று அனுசரிக்கப்படுகின்றது "உலக பூமி தினம்".1970 ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 44 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வினை நிச்சயம்:
ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்ற நீயூட்டனின் மூன்றாம் விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை கூட இதில் விதிவிலக்கு கிடையாது.
மறந்துபோன இயற்கை:
இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது .
"ஒருநாள்"தான் ஒதுக்குகிறோம்:
வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது .
காயப்படும் பூமி:
பூமியின் முதல் எதிரி யார் என்று கேட்டால் அது சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் . இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம் .
எதிரான அறிவியல்:
இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் . இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும் , பெரிய தீமையையும் கொண்டிருக்கும் .
பூமி எனும் குப்பைத்தொட்டி:
நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் , வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .
பயன்படுத்து - தூக்கி எறி:
இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை . மிகவும் குறைவு . "பயன்படுத்தியபின் தூக்கி எறி" கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது . இந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் .
மனிதனுக்கும் இதுதான் நிலை:
ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடக்கூடியச் சூழல்தான் இன்று உள்ளது . நிலம் , நீர் , காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது .
குப்பை வாழ்க்கை:
நம் மீது நாமே குப்பைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம் . நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்ல , பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அது நம் குப்பைதான் .அதற்கு நாம் மட்டுமே காரணம் .
குறையுங்கள் குப்பைகளை:
சரி எப்படி பூமியை பாதுகாப்பது என்று கேட்கிறீர்களா? பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும் குறையுங்கள்.
முடிந்தவரை உபயோகி:
நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் குப்பைக்கோ, மறுசுழற்சிக்கோ போட வேண்டும் .
மீண்டும் உருவாக்கு:
மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும் . அது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் சரி .
இயற்கையை சேமிப்போம்:
இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும் . உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும் . இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது
கடைசியில் நரகம்தான்:
முடிந்த அளவுக்கு இவற்றை உங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள் . இல்லையெனில் சுனாமியும், சூரியனும் சுட்டெரித்து நாமெல்லோரும் நரகத்திற்குத்தான் போக வேண்டும்.அதற்குள் பூமியே நரகமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.