திமுக உடன் கூட்டணியா?: காங்கிரஸ் பரிசீலிக்கும் என்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: மதச்சார்பற்ற கட்சிகளின் அணியில் சேர திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தால் அது குறித்து பரிசீலிப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் அதிமுகவைவிட பாஜக ஆபத்தான கட்சி. எனவே, பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் இளங்கோவனிடம் எழுப்பிய கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்.
கேள்வி: 11-வது முறையாக தி.மு.க. தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளாரே?
பதில்: அவரை வாழ்த்தும் அளவுக்கு எனக்கு வயது இல்லை. வெற்றி பெற்றது மகிழ்ச்சி.
கே: மதசார்பற்ற கட்சிகள் ஒன்று திரள வேண்டும் என்று கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். உங்களை அழைத்தால் ஏற்பீர்களா?
ப: அப்படி ஒரு அழைப்பு வந்தால் நிச்சயம் காங்கிரஸ் பரிசீலிக்கும்.
கே: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா?
ப: எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவை மேலிடத்துக்கு தெரிவிப்போம். மேலிடம் எடுக்கும் முடிவின் படி நடந்து கொள்வோம் என்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மோடியும் ராஜபக்சேவும்
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். தன்னை ஒரு சர்வாதிகாரியாக மாற்ற முயற்சித்து 3வது முறையாக தேர்தலை சந்தித்தார். மக்கள் அவரை தோற்கடித்துள்ளனர்.
இது நரேந்திர மோடி போன்றவர்களுக்கும் ஒருபாடமாக அமையும். நரேந்திர மோடியும் ராஜபக்சேவும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போன்றவர்கள்.
தமிழர்களுக்கு சம உரிமை
புதிதாக இலங்கையில் வெற்றி பெற்றுள்ள அரசு தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். வாழ்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
மன்மோகன் சிங் அரசு இலங்கை தமிழர்களுக்கு ஒரு லட்சம் வீடுகளை கட்டி கொடுத்தது. அதில் 25 ஆயிரம் வீடுகளை சிங்களர்களுக்கு ராஜபக்சே ஒதுக்கினார். அதை புதிய அரசு ரத்து செய்ய வேண்டும்.
வருமான வரி வழக்கு
ஜெயலலிதாவின் வருமான வரி வழக்கு 17 ஆண்டுகள் நடந்தது. 100 முறை விசாரணை நடந்திருக்கிறது. ஒருமுறை கூட ஜெயலலிதாவோ, சசிகலாவோ ஆஜர் ஆகவில்லை.
திடீர் என்று அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்திருப்பது, சாதாரண மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே சலுகையை வருமானவரி துறை மற்றவர்களுக்கும் வழங்குமா?
மத்திய அரசு விளக்கம்
ஜெயலலிதாவை தங்கள் பக்கம் இழுக்க மோடி அரசு செய்த முயற்சி காரணமாக வருமான வரித்துறை இந்த சலுகையை வழங்கி இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
லஞ்ச ஊழல்
தமிழ்நாட்டில் இப்போது அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. இப்போது புதிதாக ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். 3 வருடங்களுக்கு ஒருமுறை தனியார் பள்ளிகள் தங்கள் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு ரூ.5 லட்சம் லஞ்சம் பெறப்படுகிறது.
கரும்பு விவசாயிகள்
கரும்புக்கு டன்னுக்கு ரூ. 2,650 என தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது கரும்பு விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.3,500 வழங்க வேண்டும்.
சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.362 கோடி நிலுவைத் தொகையை ஜனவரி 15-க்குள் பெற்றுத் தர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.