வாருங்கள் யோகா செய்வோம்... சர்வதேச யோகா தினத்தை வரவேற்கும் பள்ளி மாணவர்கள்
தேவகோட்டை: சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி, அதாவது நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்தியா மட்டுமல்லாமல் பலவேறு நாடுகளிலும் இந்தியத் தூதரகங்கள் உள்ளிட்ட இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பள்ளிகளில், கல்லூரிகளில், பல்வேறு அமைப்புகளிலும் நாளை யோகா நி்கழ்வுகள் அரங்கேறவுள்ளன.
மாணவர்கள் செய்த யோகா
இந்த நிலையில், சர்வேதச யோகா தினத்தை வரவேற்கும் வண்ணம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் YOGA என அழகிய வடிவம் அமைத்து அசத்தினர்.
மாணவர்கள் யோகா
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
ஆசிரியரின் பயிற்சி
உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா மாணவர்களுக்கு யோகாசனம் தொடர்பான யமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், தியானம், சமாதி என எட்டு அங்கங்களையும் அது தொடர்பான உட்கட்டாசனம், வீரபத்ராசனம், அர்த்த புஜங்காசனம், தனுராசனம் பயிற்சிகளும், குழு ஆசனங்களும் கற்றுக் கொடுத்தார்.
ஆர்வம் காட்டிய மாணவர்கள்
மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் யோகா தொடர்பான தகவல்களை கேள்விகளாக கேட்டு கற்றுக்கொண்டனர். பயிற்சி நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.