மேட்ரிமோனியல் மூலம் முதல்வரின் சொந்த ஊர்க்காரரை ஏமாற்றிய பெண் உள்பட மூவர் கைது... கோவை போலீஸ் அதிரடி
மேட்ரிமோனியல் மூலம் பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த பெண் உள்பட 3 பேரை கோவை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை: மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் பல ஆண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி இளம்பெண் உள்பட 3 பேரை கோவை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் சாப்ட்வேர் என்ஜினியர் பாலமுருகன். இவர் ஜெர்மனியில் பணிபுரிகிறார். திருமண வரனுக்காக ஒரு இணையதளத்தில் பாலமுருகன் பதிவு செய்திருந்தார்.
அதை பார்த்துவிட்டு கோவையை சேர்ந்த இளம்பெண் மைதிலி, பாலமுருகனை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் தனது தாய், தந்தை ஆகியோரை அறிமுகப்படுத்திவிட்டார்.

பேஸ்புக்கில் பழகினார்
இந்நிலையில் பாலமுருகனுடன் மைதிலி பேஸ்புக்கில் பழகியுள்ளார். கடந்த 3 மாதங்களாக இருவரும் பழகியுள்ளனர். பேஸ்புக்கில் இருந்த மைதிலியின் புகைப்படங்களை பார்த்த பாலமுருகன் அவரை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து பழகி வந்துள்ளார்.

புற்றுநோய் இருப்பதாக பொய்
பாலமுருகனுக்கு தன்னை பிடித்து விட்டதை அறிந்து கொண்ட மைதிலி இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் தனக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பதாகவும் அதற்கான மருத்துவச் செலவிற்கு பணம் வேண்டும் என கூறி ரூ.45 லட்சத்தை பாலமுருகனிடம் பெற்றுள்ளார்.

தொடர்பு துண்டிப்பு
எனினும் மைதிலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது நடவடிக்கையை பாலமுருகன் கண்காணிக்க தொடங்கியுள்ளார். இதை தெரிந்து கொண்ட மைதிலி பாலமுருகனுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். இதையடுத்து கோவை சைபர் கிரைம் பிரிவில் பாலமுருகன் புகார் கொடுத்தார்.

கோவையில் பிடித்தனர்
பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மைதிலியின் வீட்டிற்கு விசாரணை நடத்த
போலீஸார் சென்றனர். அப்போது அங்கிருந்த மைதிலியின் ஆண் நண்பர்கள் மற்றும் பெற்றோர் போலீஸாரை தாக்க முயன்றனர். இதை தொடர்ந்து அங்கிருந்த 5 பேரையும் பிடித்து போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மைதிலியின் இயற்பெயர் ஸ்ருதி என்றும், அவரது தாய் தந்தை என கூறப்பட்டவர்கள்
பணத்துக்காக அவ்வாறு நடித்தவர்கள் என்றும் தெரியவந்தது.

போலீஸார் கைது
மேலும் மூவரும் சேர்ந்து இதே போன்ற பல ஆண்களை ஏமாற்றி மோசடியில், ஈடுபட்டு வந்ததும், மோசடி மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. ஸ்ருதி உள்ளிட்ட மூவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.












Click it and Unblock the Notifications