ஆதிதிராவிடர் சுடுகாடு அருகே குப்பை கொட்டும் அதிராம்பட்டினம் நகராட்சி... ஈசிஆர் சாலையோரம் குப்பை மலை
தஞ்சாவூர்: ஏரிப்புறக்கரை ஊராட்சியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் சுடுகாடு அருகே அதிராம்பட்டினம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவதால் சுடுகாடு செல்லும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
Recommended Video
தஞ்சை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்திருக்கிறது அதிராம்பட்டினம் நகராட்சி. இதன் அருகே ஏரிப்புறக்கரை ஊராட்சி உள்ளது.
மக்கள் தொகை அதிகம் கொண்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் பல ஆண்டுகளாக மதுக்கூர் சாலையில் உள்ள குப்பை சேமிப்புக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.
லஞ்சப் பணத்தை வாரி சுருட்டிய ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்! தட்டி தூக்கிய லஞ்ச ஒழிப்புத் துறை
நிரம்பிய குப்பை கிடங்கு
இந்த நிலையில் அங்கு குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணி தொய்வுடன் நடைபெற்று வந்ததாலும், குப்பை கொட்டும் இடத்தின் அளவு குறைவாக இருந்ததால் அங்கு குப்பைகள் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டன. அந்த இடம் குப்பைகளால் முழுவதுமாக நிரம்பிவிட்டதால் அதிராம்பட்டினத்தை அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சில மாதங்களாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
ஈசிஆர் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
கிழக்கு கடற்கரை சாலையோரம் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் அவ்வழியாக செல்லும் மக்கள் துர்நாற்றம் வீசுவதாக குற்றம்சாட்டி வந்தனர். அத்துடன் குப்பைகளுக்கு தீ வைத்துவிட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் மக்கள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக எந்த பாதுகாப்பும் இன்றி மருத்துவக் கழிவுகளும் இங்கு தூக்கி வீசப்பட்டு வருவதுடன் மனித கழிவுகளும் இங்கு கொட்டப்படுகின்றன.
ஆதிதிராவிடர் சுடுகாடு
அதேபோல் அந்த இடத்தில் ஆதிதிராவிடர் சுடுகாடு அமைந்து இருப்பதால் அங்கு குப்பை கொட்டக்கூடாது என ஏரிப்புறக்கரை மக்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுடுகாடு பாதையை அடைத்தபடி குப்பை கொட்டப்படுவதால் உள்ளே செல்ல முடியவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் குப்பை கொட்ட சென்ற வண்டிகளை வழிமறித்து அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரிப்புறக்கரை ஊராட்சித் தலைவர் புகார்
இதுகுறித்து ஏரிபுறக்கரை ஊராட்சிமன்ற தலைவர் சக்தி கூறுகையில், "விபத்துகள் அதிகம் ஏற்படுவதாலும், சுடுகாட்டுக்கு உடல்களை கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாலும் இங்கு குப்பைகளை கொட்ட வேண்டாம் என அதிராம்பட்டினம் நகராட்சியிடம் பலமுறை கூறினாம். இதனை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தபோது அதிராம்பட்டினத்தை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் அராஜகமாக பேசியுள்ளார்கள். இதனை அரசு கவனத்தில் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என அவர் வலியுறுத்தியுள்ளார்.