நெஞ்சம் துடிக்கிறது.. குடிசையை சீரமைக்க.. 10,000க்கு மகனை அடகு வைத்த பரிதாப குடும்பம்!
12 வயது மகனை குடிசையை சீரமைக்க பெற்றோர் அடகு வைத்துள்ளனர்.
தஞ்சை: குடிசை வீட்டை சீரமைக்க முடியாமல் பெற்ற மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த அவலம் டெல்டாவில் நடந்துள்ளது.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தஞ்சையும் முக்கியமானது. புயல் போய் 40 நாட்கள் ஆகியும், இன்னமும்கூட அங்கு பலரது நிலைமை சீராகவில்லை.
என்றுமே ஆறாத வடுவை புயல் ஏற்படுத்தினாலும், தொடர்ந்து மக்கள் படும் இன்னல் மேலும் மேலும் அவர்களை படுகுழியில் தள்ளி வருகிறது. இப்படித்தான் ஒரு குடும்பமும் இன்றைக்கு இந்த கோரத்தில் சிக்கியுள்ளது.

மாரிமுத்து
பட்டுக்கோட்டை அருகே அண்ணா குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. இங்குள்ள வயல் நடுவில் குடிசை வீடு கட்டிக் கொண்டு விவசாயி கூலி தொழிலாளி மாரிமுத்து வாழ்ந்து வந்திருக்கிறார். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பள்ளிக்கு செல்லவில்லை
மூத்த மகன் சக்தி, இரண்டாவது மகன் பிரமையன், மூன்றாவது மகள் காமாட்சி, ஆவர். பிரமையனுக்கு 12 வயதாகிறது. மாரிமுத்து குடும்பத்துக்கு தமிழக அரசின் குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தினால், பிள்ளைகள் இதுவரை பள்ளிக்கு செல்லவில்லை எனகூறப்படுகிறது.

நிவாரணம் இல்லை
இந்நிலையில்தான் கஜா புயல் தாக்கி மாரிமுத்துவின் குடிசை வீடு பறந்துள்ளது. மேலும் உரிய நிவாரணங்களும் மாரிமுத்து குடும்பத்துக்கு கிடைக்கவில்லை இதனால் வெயிலிலும் மழையிலும் நாட்களை இதுநாள் வரை நகர்த்தி வந்துள்ளார் மாரிமுத்து. எவ்வளவு காலத்துக்குதான் இப்படியே மழை, வெயிலில் குழந்தைகளை வைத்து கொண்டு வாட முடியும்? ஒரு கட்டத்தில் அவரால் வீட்டை சீரமைக்க முடியவில்லை.

ரூ.10 ஆயிரம் தேவை
புதிய குடிசை கட்ட 10 ரூபாய் தேவைப்பட்டது. அடகு அவரிடம் எதுவுமே இல்லை. அதனால், தனது இரண்டாவது மகனான பிரமையனை தற்காலிகமாக அடகு வைத்து வீட்டை சீரமைக்க முடிவு செய்தார். அதன்படி 3 வாரங்களுக்கு முன்பு 12 வயது மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி, நாகை மாவட்டத்தில் பனங்குடி என்ற கிராமத்தை சேர்ந்த பண்ணை தோட்டத்து உரிமையாளர் சந்துரு என்பவரிடம் விற்று விட்டார்.

ஆடு மேய்த்தான்
இந்த 3 வாரங்களாக, பண்ணை தோட்டத்தில் மட்டுமில்லாமல், ஆடு மேய்க்கும் வேலையிலும் சிறுவன் இதுநாள் வரை ஈடுபட்டு வந்திருக்கிறான். பண்ணையில் கொத்தடிமை போல சிறுவன் வேலை செய்யும் விஷயம் சிறுவர்கள் நல அதிகாரிகளின் காதுக்கு கடந்த 22-ம் தேதி வந்தது.

பெரமையா மீட்பு
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடியாக பண்ணை தோட்டத்துக்கே சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது சிறுவன் பெரமையாவை மீட்டு விசாரணை நடத்தியபோதுதான் மாரிமுத்து மகனை விற்ற விஷயம் வெளியே வந்தது.

வழக்கு பதிவு
இப்போது தஞ்சை சிறுவர்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளான். சிறுவனை விலைக்கு வாங்கிய சந்துரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தையிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications