ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா - தஞ்சை பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம்
தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. தஞ்சை பெரிய கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா இன்று நடைபெறுகிறது. பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பேரபிஷேகம் மட்டுமே நடைபெற உள்ளதால் சதய விழாவிற்கு வருகை தருபவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சோழ அரசர்களின் பெரும் புகழுக்குச் சொந்தக்காரரான ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவில் என்னும் பேரதிசயத்தை கட்டி உலக அளவில் புகழ் மிக்கவராக மாறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

ராஜராஜன் சோழன் ஐப்பசி மாதம் சதய தினத்தன்று பிறந்தார் என்பது வரலாறு. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக அரசு சார்பில் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
நாட்டியம் கலை நிகழ்ச்சி பட்டிமன்றம் ராஜராஜசோழன் விருது வழங்கும் விழா திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
அதே நேரத்தில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் பெருவுடையாருக்கு அபிஷேகம் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு மட்டுமே நடைபெற்றது அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக 1036ம் ஆண்டு சதய விழா நாளை ஒரு நாள் மட்டும் நடைபெறுகிறது.
இன்று காலையில் மங்கள இசையுடன் சதயவிழா தொடங்கியது. மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்தல் பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பேரபிஷேகம் மட்டுமே நடைபெற உள்ளது.
சதய விழாவிற்கு வருகை தருபவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடித்தல் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சதயவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் சுற்றுப்பிரகாரம், சுற்றுச்சுவர் மற்றும் சோழன் சிலை முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications