சந்தி சிரிக்கிறது.. இபிஎஸ் - ஓபிஎஸ் மீண்டும் சேரணுமா? ’அவங்க’ மனசு வைக்கனும்! தடாலடி டிடிவி தினகரன்!
தஞ்சாவூர் : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எனவும், இபிஎஸ் - ஓபிஎஸ்ஐ யார் ஏற்கனவே சேர்த்து வைத்தார்களோ, அவர்கள் மனது வைத்தால்தான் மீண்டும் அவர்களை இணைத்து வைக்க முடியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.
தஞ்சை மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வந்த அவருக்கு மாவட்ட எல்லையில் கட்சி தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் நகரில் பல நிகழ்ச்சிகளில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.

டிடிவி தினகரன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கோவை சம்பவம் தொடர்பாக, தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்காமல், இதைப்பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர், காவல்துறைக்கு தலைவராக இருக்கக்கூடியவர் மௌனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழ்நாடு அரசாங்கம் தீவிரவாதிகள் விஷயத்தில் கடுமையான போக்கை கடைபிடிக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தாலே..
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தீவிரவாதம் தலைதூக்க தொடங்குகிறது. ஆனால் வாக்கு வங்கி அரசியலில் மட்டும் மனதில் கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பொறுப்பேற்று அரசாங்கம் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கிறது. போதை பொருள் கலாச்சாரம் பெருகி கொண்டிருக்கிறது. விடியலாட்சி தருவோம் என்று கூறிவிட்டு, முதல்வரே ஏன் விடியுது என புலம்பும் அளவுக்கு நிலைமை உள்ளது.

சட்டம் ஒழுங்கு
இதே நிலை நீடித்தால் நிச்சயம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும். தமிழகத்தில் தமிழ் தான் தாய்மொழி. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த மொழியையும் விரும்பி தான் ஏற்பார்கள். திணிப்பை விரும்ப மாட்டார்கள். அதனால் இது போன்ற பிரச்சினைகளில் ஆளும் கட்சி ஈடுபடாமல், தமிழ் நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தர வேண்டும். இந்தியை அவர்கள் எப்படி திணிப்பார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது.

ஓபிஎஸ் - இபிஎஸ்
ஒரு கட்சி தமிழகத்தில் வெற்றி பெற தான் நினைப்பார்கள். 1965 இந்தி திணிப்பு காரணத்தினால், காங்கிரஸ் ஆட்சி போனது. இதுவரை அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதற்கு இந்தி தணிப்புதான் காரணம். அது போன்ற விபரீத முயற்சியை மத்திய அரசு ஈடுபடாது. இபிஎஸ் - ஓபிஎஸ்ஐ யார் ஏற்கனவே சேர்த்து வைத்தார்களோ, அவர்கள் மனசு வைத்தால்தான் மீண்டும் அவர்களை இணைத்து வைக்க முடியும்" என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications