திராவிடர் கழக மேடையில் அய்யப்ப பக்தர்களுக்கு மௌன அஞ்சலி.. “மனிதனை நினை”.. கி.வீரமணி சொன்ன வார்த்தை!
தேனி : திராவிடர் கழக மாநாட்டில், விபத்தில் உயிரிழந்த அய்யப்ப பக்தர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. திக தலைவர் கி.வீரமணி வேண்டுகோளை ஏற்று, திமுக, காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் மௌன அஞ்சலி செலுத்தினர். பெரியார் சொன்ன "கடவுளை மற! மனிதனை நினை!" என்பது தான் எங்கள் கொள்கை என கி.வீரமணி பேசியுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய ஆண்டிபட்டியைச் சேர்ந்த 8 பக்தர்கள் விபத்தில் சிக்கி பலியாகினர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்வது என்னைப் பொறுத்தவரை மூடநம்பிக்கை, ஆனால் அவர்களுக்கு அது பக்தி. இது போன்று கோவிலுக்கு சென்று வந்த இடத்தில் விபத்துக்குள்ளாகி யார் உயிரிழந்தாலும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பன்..சபரிமலை மண்டல பூஜையில் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
அய்யப்ப பக்தர்கள் பலி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழு சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடிந்து ஆண்டிப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தபோது குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மலைப்பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் தலைகீழாகப் பாய்ந்தது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி, காரில் வந்த அய்யப்ப பக்தர்கள் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
திராவிடர் கழக கூட்டம்
விபத்தில் பலியான ஐயப்ப பக்தர்களுக்கு திராவிடர் கழக கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை ஜனநாயக முற்போக்கு கொள்கை விளக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன், திமுக சார்பாக கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
மௌன அஞ்சலி
இந்தக் கூட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த 8 பக்தர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டார். கி.வீரமணியின் வேண்டுகோளை ஏற்று மேடையில் இருந்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
எங்களுக்கு மூடநம்பிக்கை, அவர்களுக்கு பக்தி
இதனைத் தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "கடவுள் மறுப்பாளர்களான நாங்கள் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் மரணத்திற்கு ஏன் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நாங்கள் சொல்வது, பெரியார் சொன்னது போல "கடவுளை மற! மனிதனை நினை!" என்பது தான். என்னைப் பொறுத்தவரை சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்வது மூடநம்பிக்கை, ஆனால் அவர்களுக்கு அது பக்தி. இது போன்று கோவிலுக்கு சென்று வந்த இடத்தில் விபத்துக்குள்ளாகி யார் உயிரிழந்தாலும் பக்தரோ, ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜகவினர் என யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம். அது மனிதன் என்கிற அடிப்படையில் என்று தெரிவித்தார்.
ஆட்சி மாற்றம் நடந்தது தெரியாதா
தொடர்ந்து பேசிய கி.வீரமணி, "நாங்கள் எல்லாம் கடிகாரத்தில் உள்ள நேரத்தை கண்டு அஞ்சி அதற்கு ஏற்றாற்போல ஓட வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கிறோம். சிலரைப் போல் கட்டிய கடிகாரத்தின் வரலாற்று தாத்பரியத்திற்கு பயப்படுவார்கள் அல்ல. இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு காவல்துறையினர் தயங்கினர். ஏனெனில் ஏதாவது விபரீதமாக பேசுவார்கள் என்ற அச்சத்தில். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது இன்னும் ஒருசில காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை போலும். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து தான் நாங்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
நாங்கள் கோவிலை உடைத்ததில்லை
மேலும் பேசிய அவர், "எங்களிடம் இருக்கின்ற அறிவுக் கடப்பாரை சனாதனத்தைத் தான் உடைத்து எறியும். கடவுள் இல்லை என்று சொல்லி வரும் எங்களால் எந்த ஒரு கோயிலோ வழிபாட்டு தலங்களோ உடைக்கப்பட்டது உண்டா? ஆனால் உங்கள் வரலாறு தடை செய்யப்பட்ட வரலாறு. இந்தியாவில் 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற பெயர் பெற்றது தான் ஆர்.எஸ்.எஸ். இன்றைக்கு இந்திவாவிற்கே திராவிட மாடல் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் சிலருக்கு திராவிட மாடல் புரியவில்லை, பிடிக்க வில்லை. உள்ளத்தால் அனைவரும் ஒன்று என்பதுதான் சமூக நீதி. சனாதனத்திற்கு எதிரானது தான் திராவிட மாடல்" எனத் தெரிவித்தார்.