நீட் தேர்வில் சாதனை-மருத்துவ படிப்புக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் ஜீவித்குமார் தவிப்பு-கட்சிகள் உதவுமா?
தேனி: நீட் தேர்வில் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் இடம்பெற்ற தேனி மாணவர் ஜீவித்குமார் தற்போது மருத்துவ படிப்புக்கு உரிய கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருவதாக கூறியுள்ளார். நீட் தேர்வில் அவர் கஷ்டப்பட்டு தேறி வந்து விட்டார்.. இப்போது அவரை படிக்க வைத்து அவருக்கு உதவ அனைத்துக் கட்சிகளும் இணைந்து உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தேனி சில்வார்பட்டி அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் கடந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண்கள் பெற்றார். அப்போது இந்த மாணவரை நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுத்து வெற்றி பெற வைப்பதாக சமூக நீதிக்காக போராடும் ஆசிரியர் சபரிமாலா அறிவித்திருந்தார்.

மாணவர் ஜீவித்குமார்
இதனையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி உதவிகள் பெற்று நாமக்கல்லில் தனியார் பயிற்சி மையத்தில் ஜீவித்குமார் சேர்க்கப்பட்டார். தற்போது இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்றுள்ளார் ஜீவித்குமார். மொத்தம் 720-க்கு 644 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். கடுமையான போராட்டத்தின் மூலமாக, பலரது உதவியால் ஒரு வைராக்கியத்துடன் படிக்க வைக்கப்பட்டதால் அரசுப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் சாதித்திருக்கிறார் என்பதுதான் உண்மை.

வறுமையில் பெற்றோர்
நீட் தேர்வில் என்னதான் சாதனை படைத்திருந்தாலும் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்தக் கூடிய வருமானம் ஜீவித்குமாரின் பெற்றொருக்கு இல்லை. அவரது தந்தை கூலிக்கு ஆடுகள் மேய்க்கும் தொழிலை செய்கிறார்.. தாயாரோ 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிகிறார். இந்த சூழ்நிலையில் அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டணத்தை கூட ஜீவித்குமாரால் செலுத்த முடியாத வறுமையில் உள்ளார்.

ஜீவித்குமாருக்கு உதவ வேண்டும்
நீட் தேர்வை நியாயப்படுத்துகிறவர்களும் சரி.. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராடுகிறவர்களும் சரி... தடைகள் பல தாண்டி மருத்துவப் படிப்பின் நுழைவாயிலை தொட்டுவிட்ட ஜீவித்குமாரை அரவணைத்து கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். இது ஏதோ ஒரு ஜீவித்குமாருக்கான உதவியாகவும் நின்று போய்விடவும் கூடாது.

மாணவர்களுக்கு அரசு, அரசியல் கட்சிகள் உதவி
அரசுப் பள்ளிகளில் இருக்கும் திறமையான மாணவர்களை கண்டறிந்து நீட் உள்ளிட்ட அத்தனை தகுதித் தேர்வுகளுக்கும் உரிய பயிற்சிகளை அளித்து அவர்களுக்கான நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டியது அரசு, அத்தனை அரசியல் கட்சிகளின் பெருங்கடமை. இதை ஒரு முன்னுதாரணமான செயல் திட்டமாக அரசும் அரசியல் கட்சிகளும் கையிலெடுத்தால் நல்லது. ஜீவித்குமாருக்கு மட்டுமல்லாமல் இவர் போல உள்ள பிற மாணவர்களுக்கும் கட்சிகள் இணைந்து கை கொடுக்கலாம்.. இதுதான் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications