இன்னும் எத்தனை உயிர்? ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை! ஒரே நாளில் 1 லட்சம்..மொத்தம் 15 லட்சம் லாஸ்!
திருநெல்வேலி : தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரை ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில் நெல்லை அருகே ஆன்லைன் ரம்மியில் 15 லட்சம் வரை இழந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்ததால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது.

ஆன்லைன் ரம்மி
ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து கோரிக்கை குரல்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஜூன் 10ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும், அது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைத்து தமிழக அரசு அறிவித்தது.

ஆளுநருக்கு விளக்கம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட காலமாக அந்த மசோதா கிடப்பில் இருந்த நிலையில், அது தொடர்பான கோரிக்கைகளால் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுத்தும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அது சட்டமாவது தாமதமாகியுள்ளது.

ஆளுநர் ஆர்என் ரவி
ஆனாலும் ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்ததால் கடந்த மாதமே அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து ஆன்லைன் ரம்மி ஆப்களில் பணம் செலுத்தி விளையாடுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடைச் சட்டம் மசோதா காலாவதியாகி விட்ட நிலையில் தற்போது சட்டம் நிறைவேற்றப்படாததால் மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன.

மீண்டும் தற்கொலை
இந்நிலையில் நெல்லை அருகே ஆன்லைன் ரம்மியில் 15 லட்சம் வரை இழந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் பனங்குடி அருகே ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த சிவன்ராஜ் என்பவர் தொடர்ந்து பல நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்திருக்கிறார். தொடர்ந்து தனது பணம் முழுவதையும் இழந்த அவர் பிறரிடம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. மேலும் சொத்துகளை விற்று வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்து ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார்.

ஒரு லட்சம் ரூபாய் கடன்
சுமார் பதினைந்து லட்சம் ரூபாய் வரை அவர் பணத்தை இழந்த நிலையில் விட்டதை பிடித்து விடலாம் என நினைத்து நேற்று ஒரு வருடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதனை ஒரே நாளில் இழந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது நண்பர்களை தொடர்பு கொண்ட சிவன் ராஜ் ஆன்லைன் ரம்மியால் மொத்த பணத்தையும் இழந்து விட்டதால் பணம் கேட்டு கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறியுள்ளார்.

தந்தை கோரிக்கை
இதனால் அதிர்ச்சியான நண்பர்கள் வீட்டில் சென்று பார்த்த போது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதை அடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் சட்டத்தை காலாவதியாக்கிய நிலையில் ஆன்லைன் ரம்மியால் எனது மகன் இறந்திருக்கிறான் இனியும் யாரும் இறக்க கூடாது எனது மகனே இறுதி உயிர் பலியாக இருக்க வேண்டும் என அவரது தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications