பயங்கர குழப்பம்.. அதிமுக யாரை வேட்பாளராக அறிவித்தாலும்.. அடித்துச் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்!
அதிமுக யாரை வேட்பாளராக அறிவித்தாலும் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி உறுதி என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி : அதிமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை. பயங்கர குழப்பமான மனநிலையில் அவர்கள் இருப்பதால் திமுக வேட்பாளருக்கு நிச்சய வெற்றி என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் களமிறங்க முடிவெடுத்துள்ளன. இந்நிலையில் தான் அமைச்சர் ராஜகண்ணப்பன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முதல்வர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நெல்லை மாநகர திமுக அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தூற்றுவோர் தூற்றட்டும்.. எடப்பாடி பற்றி கவலையில்லை.. பகவத் கீதையை மேற்கோள் காட்டிய ராஜகண்ணப்பன்!
நிச்சய வெற்றி
அப்போது பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரில் இந்த இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் தீவிரமாக களமிறங்கி பணியாற்றுவதால், கூட்டணி வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார்.
குழப்பமான மனநிலை
அதிமுகவை பொறுத்தவரை அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. அவர்கள் குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள். அதனால் அந்த கூட்டணியில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் திமுக கூட்டணி வேட்பாளர் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி." எனத் தெரிவித்தார்.
மடியில் கனமில்லை
மேலும் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஒரு வருடத்தில் வரும். அதனை சந்திக்க திமுக தயாராக உள்ளது. மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு திமுக தலைவர் ஒருபோதும் தயங்கியது கிடையாது. இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி என்று பாராட்டப்பட்டுள்ள ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது.
நேரத்திற்கு ஒரு பேச்சு
அனைத்து மக்களுக்கும் சமமான நல்லாட்சி என அனைவரும் திமுகவை பாராட்டி வருகிறார்கள்." எனத் தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், அண்ணாமலை நேரத்திற்கு ஒரு பேச்சு பேசுபவர் எனத் தெரிவித்தார்.