எப்போ பார்த்தாலும் செல்போனா? ஆத்திரத்தில் கணவன் எடுத்த முடிவு! அனாதையாகிப் போன 3 பிஞ்சுகள்!
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே தனது மனைவி நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் வேறு ஆண்களுடன் பழகுவதாக நினைத்த கணவன் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு சடலத்தை ஆற்றில் வீசிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நம்பியார் பாய்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் உள்ள மயிலாப்பூர் என்ற பகுதியில் ஆற்றங்கரையோரம் பெண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த இளம் பெண் ஒருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் சடலம்
ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் ஏதேனும் விபத்தில் சிக்கி இருந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டவர் அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரி என்பதும் அவரது கணவரின் பெயர் சுடலைக்கண்ணு என்பதும் தெரிய வந்தது. அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக உட்படுத்திய போது அவரது கழுத்து பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன.

கணவனின் வெறிச்செயல்
இதனால் யாரோ ஒரு மர்ம நபர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து ஆற்றில் வீசி சென்று இருக்கலாம் என சந்தேகித்தனர். அவரது கணவர் சுடலை கண்ணுவும் எதுவுமே தெரியாதது போல மனைவியை இழந்துவிட்ட துக்கத்தில் கதறி துடித்து வந்தார். இந்நிலையில் அவர் ஓவர் ஆக்டிங் செய்வதை கண்டுபிடித்த காவல்துறையினர் விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்த போது தனது மனைவி பலருடன் செல்போனில் பேசி வந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்து ஆற்றில் உடலை வீசியது தெரிய வந்தது.

கொடூர கொலை
இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். கூலி வேலைக்குச் சென்ற சுடலை கண்ணுக்கு போதிய வருமானம் இல்லை என அடிக்கடி வெளியூர்களுக்கு ஓட்டுனர் பணிக்கு செல்வதும் வழக்கம். இந்த நிலையில் சுடலை கண்ணு வெளியே செல்லும் நேரத்தில் ஈஸ்வரி தொடர்ந்து செல்போன்களை பேசி வந்ததோடு சில ஆண்களோடு பழகுவதாக சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள்
இந்த நிலையில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டதால் தனது தாய் வீட்டிற்கு சென்று இருக்கிறார் ஈஸ்வரி. கடந்த 16ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள சர்ச்சுக்கு சென்று விட்டு ஈஸ்வரி திரும்பியபோது சுடலை கண்ணுக்கும் ஈஸ்வரிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றியது ஆத்திரம் அடைந்த சுடலை கண்ணு தனது மனைவி என்றும் பாராமல் ஈஸ்வரியின் கழுத்தை நெரித்து கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளார். இதை அடுத்து சுடலை கண்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தந்தை சிறையில் தாய் கல்லறையில் குழந்தைகள் பிழைக்க வழியின்றி அனாதையாக நிற்கின்றனர்.












Click it and Unblock the Notifications