அமைச்சரையே தாக்க முயன்ற திமுகவினர்.. அவசரமாக வெளியேறிய அனிதா ராதாகிருஷ்ணன்.. களேபரமான நெல்லை
திருநெல்வேலி: திமுகவில் திருநெல்வேலி லோக்சபா தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஆலோசனை கூட்டத்தில் திமுகவினர் இருதரப்பாக பிரிந்து மோதியபோது சிலர் அனிதா ராதாகிருஷ்ணனை திட்டி தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி திமுகவில் கோஷ்டி பூசல் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி தொகுதியில் சிட்டிங் எம்பியாக திமுகவின் ஞானதிரவியம் உள்ளார். இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் அவருக்கு திமுக தலைமை மீண்டும் சீட் வழங்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் தான் திருநெல்வேலியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவை தலைவர் கிரகாம்பெல், இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலர் கணேஷ்குமார் ஆதித்தன், சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகனும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பிரபாகரன் உள்ளிட்டவர்கள் வாய்ப்பு கேட்டனர்.
இப்படி திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட அதிகமானவர்கள் விரும்பியது கட்சி தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கி மற்றவர்களுக்கு மறுத்தால் அது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தும். ஏற்கனவே கோஷ்டி பூசல் உள்ள அந்த மாவட்டத்தில் அது இன்னும் பிரச்சனையை அதிகப்படுத்தும் என திமுக தலைமை நினைத்தது. இதனால் திருநெல்வேலி தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வழங்கப்பட்டது.
‛‛திமுக தொகுதி தாரைவார்ப்பு’’.. நெல்லையில் வெல்லுமா காங்கிரஸ்! வேட்பாளர் யார் தெரியுமா? களநிலவரம்
காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் சார்பில் சத்யா ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர். இந்நிலையில் தான் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் சிலரும் அதிருப்தியாகி உள்ளனர். திருநெல்வேலியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதால் திமுக தலைவர்களும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
களத்தில் நயினார் நாகேந்திரன்.. பாஜக வசமாகிறதா நெல்லை? காங்கிரஸ் சொதப்பினால் அவ்வளவு தான்! களநிலவரம்
இந்நிலையில் தான் திருநெல்வேலி லோக்சபா தொகுதியின் பொறுப்பாளராக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தொகுதி முழுவதும் திமுக பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூசுக்கு ஆதரவாக அவர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று திசையன்விளையில் திமுகவின் செயல் வீரர்கள் மீட்டிங் நடந்தது. இந்த மீட்டிங்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
திமுக நகரச் செயலாளர் ஜான்கென்னடி தலைமை வகித்தார். அப்போது மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெகதீஷ் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார். இதற்கு ஜான்கென்னடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜான் கென்னடி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆதரவாளராக உள்ள நிலையில் ஜெகதீஷ் சபாநாயகர் அப்பாவுவின் ஆதரவாளர் ஆவார்.
இந்நிலையில் தான் ஜான் கென்னடி மாவட்டச் செயலாளர்தான் பொறுப்பு குழுவை நியமிக்க வேண்டும் எனக்கூறினார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்த கைக்கலப்பின்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சிலர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரை அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் என விமர்சனம் செய்தனர்.
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்பாக மீட்டிங் நடந்த இடத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். இந்த பிரச்சனை தற்போது பூதாகரமாகி உள்ளது. திமுக தலைமை வரை இந்த பிரச்சனை சென்றுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications