ஏன் பொங்கல் பண்டிகை மதசார்பற்ற விழா தெரியுமா? திருமாவளவன் சொன்ன விளக்கம்!
திருநெல்வேலி: தமிழர் திருநாளான பொங்கல் விழா ஏன் மதநல்லிணக்க விழா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பேசியுள்ளார். பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பின் எந்தவித புனைவுகளோ, புராணங்களோ, கதைகளோ இல்லை. இயற்கையோடு இயந்து வாழும் தமிழர்களின் மதசார்பற்ற விழா பொங்கல் பண்டிகை என்றும் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், உளவுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துகிற நாள் தை பொங்கல். அதேபோல் உழவு தொழிலுக்கு துணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளினை மாட்டு பொங்கலாக கொண்டாடுகிறோம். பின்னர் காணும் பொங்கல் கன்னித் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

காணும் பொங்கல்
காணும் பொங்கல் என்பது மனித உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் நாள். மூத்தவர்களை சந்திப்பதற்கும் வாழ்த்து பெறுவதற்குமான நாள். ஓராண்டு பகை இருந்தாலும், அந்த நாளில் சென்று ஆசிர்வாதம் பெற்றால் பகை, முரண் எல்லாம் காணாமல் போய்விடும். கன்னித் திருநாள் என்பதற்கு பெயர் வந்ததற்கு, பெண்கள் அனைவரும் கூடி விளையாடி போட்டிகளில் பங்கேற்கும் திருவிழா தான் அது.

மதசார்பற்ற விழா
இந்த திருவிழாக்கள் அனைத்திற்கும் பின்னால் எந்த புனைவுகளோ புராணங்களோ, கதைகளோ இல்லை. அதனால் இந்த விழா இயற்கையோடு தொடர்புடைய, இயற்கையோடு இயந்து வாழ்கிற தமிழ் சமூகத்தின் பாரம்பரிய விழா என்பதோடு, மதசார்பற்ற விழா. இதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம். இந்த விழாவினை நாம் கொண்டாடும் போது சமூக நல்லிணக்க பொங்கல் விழா என்று கொண்டாடுவது பொறுத்தமானது.

நல்லிணக்கம்
நல்லிணக்கம் என்பது நல்லதற்கு இணக்கமாக இருப்பது. சிலர் மது குடிப்பது உள்ளிட்ட கெட்ட விவகாரங்களுக்கும் இணக்கமாக இருப்பார்கள். ஏன் திருடுவதற்கு கூட இணக்கமாக இருப்பார்கள். ஆனால் அனைவரும் நல்லதற்கு இணக்கமாக இருக்க வேண்டும். வெறுப்பு அரசியலை பரப்புவதற்கு இணக்கமாக இருக்க கூடாது. சமூகநீதி அரசியலுக்கு இணக்கமாகவும், அன்பை விதைப்பதற்கும் இணக்கமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு விவகாரம்
தொடர்ந்து தமிழ்நாடு, தமிழகம் பற்றி திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாட்டை தமிழகம், தாயகம் என்று கூட சொல்லலாம். ஆனால் தமிழ்நாடு என்பதற்கும், தமிழகம் என்று அழைப்பதற்கு பின்னால் சூது இருக்கிறது. திராவிட அரசியல் எதிர்ப்பு என்பது திமுகவுக்கோ, திராவிடர் கழகத்திற்கு எதிரான அரசியலோ அல்ல. அது சமூகநீதிக்கு எதிரான அரசியல். அதனால் தான் திருமாவளவனும் பேச வேண்டியது இருக்கிறது. தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்பதன் மூலம் தமிழர்களை ஒற்றுமையை சிதைக்கும் சூழ்ச்சி இருக்கிறது. பாரதம் என்று மட்டுமே சொல்ல வேண்டும் என்ற துணிச்சல் அவர்களுக்கு வந்ததில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications