இப்போதுதான் விசில் அடிக்க ஆரம்பித்திருக்கிறது.. இனி நாங்க சேர்ந்து டிரம்ஸ் அடிப்போம்..நயினார் நக்கல்
நெல்லை: விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்த வழக்கில் அபராதம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு, இப்போதுதான் விசில் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. பிறகு, டிரம்ஸ் எல்லாம் நாங்க சேர்ந்து அடிப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வரும் மார்ச் 1 ஆம் தேதி வருகிறார். பிப்ரவரி 28 ஆம் தேதி வருவதாக இருந்தது. மார்ச் 1 ஆம் தேதி வருகை தந்து தேசிய ஜனநாயக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவுள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் மாநாடு போல நடந்து முடிந்தது.

திமுக ஊழல்
பிரதமர் நரேந்திர மோடியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜிகே வாசன், டிடிவி தினகரன், நீதிக்கட்சிகள் தலைவர் சண்முகம், பாரிவேந்தர் என அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் தேஜ கூட்டணிக்கு ஆதரவு தந்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், திமுக செய்த ஊழலை மறைப்பதற்காக மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை. பட்ஜெட் போடவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
பட்ஜெட்டில் 40 ஆயிரம் கோடி செமி கண்டக்டருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு தமிழகம் முழுவதும் பட்ஜெட் போடுகிறது. ஆனால் மாவட்டத்திற்கு ஒன்று என்று பட்ஜெட் போடுவதில்லை. ஒட்டுமொத்தமாக எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதனடிப்படையில் பட்ஜெட் போடப்படும். அதற்கான நிதிகள் ஒதுக்கப்படும்.
சிறுபான்மையினருக்கு எதிராக
பாஜகவைப் பொருத்தவரை சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாக பொய்க் குற்றாச்சாட்டைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். எங்களுடைய சிறுபான்மை மாநிலத் தலைவர் ஜான்சன் இங்கு இருக்கிறார். திருநெல்வேலியில் சிறுபான்மையினர் மாநில மாநாட்டைக் கூட நடத்தவிருக்கின்றனர். எங்களுக்கு எந்தவிதமா பாகுபாடும், பேதமும் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற வழியில் தான் பாஜக பயணிக்கிறது.
இந்த 11 ஆண்டு ஆட்சியில் எந்தவொரு சிறுபான்மையினருக்கும் சிறு பாதிப்பு கூட நேர்ந்ததில்லை. எல்லோருக்கும் சமமான முறையில் எல்லோருக்கும் எல்லாம் என்கிற முறையில் தான் பாஜகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
விஜய் வரி ஏய்ப்பு வழக்கு
தொடர்ந்து, வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு அபராதம் விதித்தது தொடர்பான கேள்விக்கு, விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதை நாம் தப்பு என்று சொல்ல முடியுமா. இப்போது தான் ஒன்றொன்றாக ஆரம்பித்திருக்கிறது. விசில் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இனி நாங்க எல்லோரும் ஒன்றாக சேர்ந்து டிரம்ஸ் எல்லாம் அடிப்போம் என்று சிரித்துக் கொண்டே சொல்லிச் சென்றார்.












Click it and Unblock the Notifications