காலை “கட்சி நிதி”.. மாலையில் குவாட்டர் கட்டிங்.. டாஸ்மாக் கடையில் அடாவடி வசூல்.. விசிக பிரமுகர் கைது
தென்காசி : டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டி அடிக்கடி இலவசமாக மது பாட்டில் மற்றும் கட்சி வளர்ச்சி நிதி எனக் கூறி பணம் வசூல் செய்ததாக வீடியோ வெளியான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடையம் பகுதி ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார்.
அன்பழகன் வீடு இருக்கும் வெங்கடாம்பட்டி பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மது கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

விசிக பிரமுகர்
அந்த மதுக் கடைக்கு அடிக்கடி சென்று வந்த அன்பழகன் விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ச்சி நிதி எனக்கூறி கடையில் பணம் வசூல் செய்வது இலவசமாக மது பாட்டில் வாங்குவது என தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அன்பழகன் தனது கட்சி நிர்வாகி ஒருவரை சம்பந்தப்பட்ட மதுக் கடைக்குச் சென்று மது பாட்டில் மற்றும் பணம் வாங்கி வரச்சொல்லி அனுப்பி உள்ளார்.

அடிக்கடி தொல்லை
அடிக்கடி அன்பழகன் தொல்லை செய்வதாகக் கூறிய கடை ஊழியர்கள் பணமும் மது பாட்டிலும் தரமுடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த அந்த நிர்வாகி கடையில் இருந்த ஊழியர்கள் மிரட்டியுள்ளார்.நிர்வாகி மிரட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

போலீசில் புகார்
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து மதுக்கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் அன்பழகன் மீது கடையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரில் அன்பழகன் அடிக்கடி கட்சி வளர்ச்சி நிதி என்றும் தான் ஒன்றிய செயலாளர் என்று கூறி மதுபாட்டில்களை இலவசமாக பெற்று வந்த நிலையில் தரவில்லை என்றால் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தனர்.

அதிரடி கைது
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அன்பழகன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடிபோதையில் ஒன்றிய செயலாளர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications