அடுத்த ஷாக்.. திருவள்ளூர் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.. மக்கள் சாலை மறியல்
திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதி பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ளது அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு விடுதி வசதியும் உள்ளது. இந்த பள்ளி விடுதியில் திருத்தணியை அடுத்த தெக்களூரை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து அந்த மாணவி ஆயத்தமாகியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து காலை உணவுக்காக நண்பர்களுடன் உணவு அருந்த சென்ற பின்னர் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

போலீஸார் விசாரணை
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவியின் மரணம் குறித்து பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

காலையில் மரணம்?
மாணவி காலையிலேயே மரணமடைந்த நிலையில் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தாமதமாக தகவல் கூறியதாக உறவினர்களும் பெற்றோர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும் "தங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்" என்பதை மட்டும் பள்ளி நிர்வாகம் கூறியதாகவும் இறந்ததை கூறவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

மறியல்
பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் பெற்றோரும் உறவினர்களும், கிராம மக்களும் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகளை சிறைபிடித்து மறியல் நடத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாணவி மரணமடைந்ததை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் குவிப்பு
ஏராளமான கிராம மக்கள் கூடியுள்ளதால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையிலும் போலீஸார் ஏராளமானோர் உள்ளனர். கடந்த 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி விடுதியில் மரணமடைந்து, அவரது மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய போது பள்ளியில் வன்முறை நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications