அண்ணா பிறந்தநாளில் அதிரடி.. “இருளர்” மக்களுக்கு விடியல் தந்த “புல்டோசர்”! இனி சுதந்திர பறவைகள்
திருவள்ளூர்: இருளர் சமுதாய குடியிருப்பை சுற்றிலும் கட்டப்பட்டு இருந்த தீண்டாமை தடுப்புச் சுவர் அதிகாரிகள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்து அமைந்து இருக்கிறது கச்சூர் ஊராட்சி. இப்பகுதிக்கு உட்பட்ட வாழ்வந்தான் கோட்டை பகுதியில் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 29 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் இருளர் மக்களின் குடியிருப்புகளை சுற்றி பாஸ்கர் ராவ் என்ற நபர் நிலம் வாங்கி இருக்கிறார். அவர் தனது நிலத்தை விற்பனை செய்வதற்காக பாஸ்கர் அவென்யூ என்ற பெயரில் அதற்கு பதாகையும் வைத்து இருக்கிறார்.

தீண்டாமை சுவர்
மேலும் அப்பகுதியில் வசிக்கும் இருளர் சமுதாய பழங்குடியின பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அவ்வழியாக செல்ல முடியாத வகையில் குடியிருப்பை சுற்றிலும் சுமார் 7 அடி உயரத்தில் தீண்டாமை தடுப்பு சுவரையும் அவர் எழுப்பி வைத்திருந்தார். இதனால் பல்வேறு இன்னல்களுக்கு இருளர் பழங்குடியின மக்கள் ஆளாகி வந்தனர்.

நில உரிமையாளர்
இது தொடர்பாக பாஸ்கர் ராவை சந்தித்த இருளர் மக்கள் தீண்டாமை சுவற்றை அகற்றுமாறு வலியுறுத்தி இருக்கின்றனர். அப்போது அவர்களிடம், நீங்கள் இப்பகுதியில் வசிப்பதன் காரணமாகவே என்னுடைய நிலங்கள் விற்பனை ஆகவில்லை என்றும், இதன் காரணமாகவே இப்பகுதியில் சுவர் எழுப்பியதாக கூறியுள்ளார்.

போராட்டம்
இது தொடர்பாக இருளர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இருளர் மக்கள் கடந்த 12 ஆம் தேதி ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டு இருந்தனர்.

புல்டோசர்
இதனால் இந்த விவகாரம் அதிகாரிகள் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து இருளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு சென்ற ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அருண்குமார், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் புல்டோசர் மூலம் தீண்டாமை தடுப்புச் சுவரை இடித்து அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications